இம்ரான் கானுக்கு ஆதரவாக களமிறங்கிய சர்வதேச கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள்...!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு முறையான மருத்துவ வசதிகளை வழங்க வலியுறுத்திக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் அணிகளின் 14-இற்கும் மேற்பட்ட முன்னாள் தலைவர்கள் (Captains) கூட்டாக இது குறித்துக் கடிதமொன்றை வெளியிட்டுள்ளனர்.
ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளால் ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானுக்கு, சிறையில் போதிய மருத்துவ மற்றும் சட்ட ரீதியான வசதிகள் வழங்கப்படுவதில்லை என முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
பார்வை இழப்பு
குறிப்பாக, கடினமான சூழல்களால் அவரது வலது கண்ணில் 85 சதவீதப் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, அவருக்குச் சர்வதேச தரத்திலான மருத்துவச் சேவைகள் வழங்கப்பட வேண்டுமெனக் கோரி இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான கபில் தேவ், சுனில் கவாஸ்கர் ஆகியோருடன் மைக்கேல் அதர்டன், ஆலன் பார்டர், கிரெக் சேப்பல், கிளைவ் லாயிட் மற்றும் ஸ்டீவ் வாக் போன்ற உலகப்புகழ் பெற்ற 14-இற்கும் மேற்பட்ட முன்னாள் தலைவர்கள் இந்தக் கடிதத்தை முன்வைத்துள்ளனர்.
விளையாட்டுப் பிரபலங்கள்
இந்தநிலையில், நேற்றைய தினம் (17-02-2026) இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
குறித்த கடிதத்தில், “உலக கிரிக்கெட் ஜாம்பவானான இம்ரான் கானின் உடல்நிலை குறித்த தகவல்கள் வருத்தமளிக்கின்றன.

அவர் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்" என வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இம்ரான் கான் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்களை வழங்க பாகிஸ்தான் அரசு மறுப்பதாக அவரது குடும்பத்தினர் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்த நிலையில், சர்வதேச விளையாட்டுப் பிரபலங்களின் இந்தத் தலையீடு பாகிஸ்தான் அரசுக்கு அரசியல் ரீதியான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |