அமெரிக்க வர்த்தக போரில் பாரிய அடிவாங்கிய மற்றுமொரு நாடு
அமெரிக்காவுடன் (United States) நடைபெறும் வர்த்தக போர் ஜேர்மனிக்கு (Germany) 330 பில்லியன் டொலர் இழப்பை ஏற்படுத்தும் என அறிக்கையொன்று வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜேர்மனிக்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய வர்த்தக போர், 2028 ஆம் ஆண்டுக்குள் ஜேர்மனிக்கு 290 பில்லியன் யூரோ (அல்லது 330 பில்லியன் அமெரிக்க டொலர்) இழப்பை ஏற்படுத்தும் என்று ஜேர்மன் எகனாமிக் இன்ஸ்டிடியூட் (IW) ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, ஜேர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 1.6 சதவீத இழப்பு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வர்த்தக போர்
இந்த வர்த்தக போர், ஜேர்மனியை மட்டும் அல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தையே பாதிக்கும் என்று ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
2025 முதல் 2028 வரையிலான நான்கு ஆண்டுகளில், ஐரோப்பிய ஒன்றியம் 1.1 டிரில்லியன் யூரோ வரை இழக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இந்த வரி நடவடிக்கைகளானது வளர்ச்சிப் பாதையில் உள்ள நாடுகள் மற்றும் மாற்றநிலை பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளை இன்னும் கடுமையாக பாதிக்கும் என ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
பல்வேறு நாடு
ஏப்ரல் இரண்டாம் திகதியன்று ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்து பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பதிலடி வரிகளை (reciprocal tariffs) விதித்தார்.
அடிப்படை வரி விகிதம் பத்து சதவீதமாக நிர்ணயிக்கப்பட்ட அதே நேரத்தில், அமெரிக்காவுடன் அதிக வர்த்தக இழப்பை சந்திக்கும் 57 நாடுகளுக்கு மேலும் அதிக வரிகள் விதிக்கப்பட்டது.
ஏப்ரல் ஒன்பது அன்று, பதிலளிக்காத 75 மேற்பட்ட நாடுகளுக்கு 90 நாட்கள் காலத்திற்கு பத்து சதவீத அடிப்படை வரி விதிக்கப்படும் என்றும் இந்த நாடுகள் பேச்சுவார்த்தையை நாடினாலும் இந்த வரி விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
