அழிக்கப்படும் தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்கள் : இன்று உலக பாரம்பரிய நாள்
எந்தவொரு தேசத்தினதும் தனித்துவமான அடையாளமாக அந்த நிலத்தின் பாரம்பரியச் சின்னங்கள்தான் இருக்கின்றன.
இலக்கியங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், சிலைகள், ஆலயங்கள், நினைவிடங்கள் என்று ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அடையாளங்கள் அந்த நாட்டின் வரலாற்றையும் வளர்ச்சியையும் பண்பாட்டையும் எடுத்துரைக்கும் சான்றுகளாகக் கொள்ளப்படுகின்றன.
இன்று (ஏப்ரல் 18) உலக பாரம்பரிய நாள், இந்த நாளில் பாரம்பரிய அடையாளங்களுக்காக மரபுரிமை சான்றுகளுக்காக போராடிக் கொண்டிருக்கிற இனம் என்ற வகையில் இன்றைய நாளில் நமது கவனத்தையும் வெளிப்படுத்த வேண்டும்.
அதிலும் கடந்த எழுபது வருடங்களாக பாரம்பரிள அழிப்புகள் ஈழம்மீது தொடர்கின்ற நிலையில் அதற்கு எதிராக உயிர்களை தியாகித்துப் போராடுகிற இனம் நாம்.
உலக பாரம்பரிய நாள்
உலக பாரம்பரிய நாள் என்பது நினைவுச் சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள் (International Day for Monuments and Sites) ஆகும். இதனை உலக மரபுரிமை நாள் (World Heritage Day) அல்லது உலகப் பாரம்பரிய நாள் என்றும் குறிப்பிடுகின்றனர்.
உலகப் பண்பாட்டு மரபின் பல்வகைத் தன்மைகளின் தொடர்பிலும், அவற்றைக் காப்பாண்மை செய்தல் மற்றும் பாதுகாத்தல் நடவடிக்கைகளின் தொடர்பிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கில் வருடம்தோறும் ஏப்ரல் 18 ஆம் நாள் உலக பாரம்பரிய நாளாக்க் கொண்டாடப்படுகிறது.
இது 1982 ஆண்டில் துனீசியாவில் நடைபெற்ற நினைவுச்சின்னங்களுக்கும் களங்களுக்குமான அனைத்துலக அவையின் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் ஏப்ரல் 18 ஆம் நாள் "நினைவுச் சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாளாக கொண்டாடப் பரிந்துரைக்கப்பட்டது.
பின்னதாக 1983 நவம்பரில் நடைபெற்ற யுனெஸ்கோ பொதுச் சபையின் 22 ஆவது கூட்டத் தொடரில், ஏப்ரல் 18 ஆம் நாளை, உலக பாரம்பரிய தினமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நாளினை அனுஷ்டிப்பதன் வாயிலாக, கட்டிட பெருமைகளைக் கண்காட்சிகள் அமைத்து விவரிப்பது, கட்டணம் ஏதுமில்லாமல் இந்த ஒரு நாள் நினைவிடம், அரும் பொருளகம், தலங்களுக்கு மக்களை அனுமதிப்பது, இந்த நாள் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரிவிப்பது, பொது இடங்களில் விவாதங்கள் நடத்துவது, புத்தகங்கள், தபால் தலைகள் போன்றவற்றை அச்சிடுவது, பாரம்பரியத்தை காப்பாற்றியவருக்கு சிறப்பு பரிசுகள் வழங்குவது, பள்ளி மாணவர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் நிகழ்ச்சிகள் நடத்துவது முதலிய நடவடிக்கைகள் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.
இலங்கையில் பாரம்பரியச் சின்னங்கள்
இந்து சமுத்திரத்தின் முத்து எனப்படும் இலங்கை ஓர் அழகிய தீவு மாத்திரமின்றி பல தொன்மை அடையாளங்களைக் கொண்ட நாடாகவும் விளங்குகிறது. இலங்கையில் உள்ள எட்டு இடங்களை உலக மரபுரிமை மையங்களாக யுனஸ்கோ அறிவித்துள்ளது.
பழைய அநுராதபுர நகரம், பழைய பொலன்னறுவை நகரம், சீகிரியா, தம்புள்ளை ரஜமஹா விகாரை, காலி கோட்டை, கண்டி தலதா மாளிகை, சிங்கராஜ வனப் பகுதி, இலங்கையின் மத்திய மலைநாடு என்பன அவையாகும். இதில் பழைய பொலன்னறுவை நகரம் என்பது ஈழத்தில் சோழ மன்னர்கள் நடாத்திய இராச்சியத்தின் மரபுரிமைச் சின்னமாகும்.
அனுராதபுரத்தை சோழர்கள் கைப்பற்றிய பின்னர் பொலனறுவையை தலைநகரமாகக் கொண்டு ஈழத் தீவை ஆட்சி செய்தனர். பொலனறுவை இராட்சியம் என்றும் மும்முடிச் சோழ மண்டலம் என்றும் இந்த ஆட்சி சிறப்பாக அழைக்கப்பட்டது.
அநுராதபுர காலத்தின் போது பொலன்னறுவை புகழ் வாய்ந்த நகரமாகக் காணப்பட்டது. ஐந்தாம் மகிந்தன் அனுராதபுர இராசதானியை ஆட்சி செய்த போது இராசேந்திர சோழன் என்ற சோழ மன்னனால் இராசரட்டை கைப்பற்றப்பட்டது, பின் அப்பகுதி சோழப்பேரரசின் பகுதியாகியதுடன் அது 'மும்முடிச் சோழ மண்டலம்' எனப்பெயரிடப்பட்டது வரலாறு. இதன் தொன்மையின் சான்றாக விளங்கும் பழைய பொலன்னறுவை நகரம், உலக மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றாக தமிழர்களின் பெருமையை உரைக்கிறது.
யாழ் நூலக எரிப்பு
ஈழ மண்ணில் தமிழர்கள் பல ஒடுக்குமுறைகளையும் இனவழிப்புக்களையும் உச்சமாகச் சந்தித்து வந்த காலத்தில் பண்பாடுமீதும் பாரம்பரியம்மீதும் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய அழிப்பாக யாழ் நூலக எரிப்பு மேற்கொள்ளப்பட்டது.
ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசு, தமிழ் மக்களை அடக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு எந்த அதிகாரமும் கொடுக்க முடியாது, அப்படி அதிகாரத்தை எடுக்க முனைந்தால் இந்த நூல்களைப் போல நீங்களும் அழிக்கப்படுவீர்கள் என்ற எச்சரிக்கையாக யாழ் நூலகத்தை எரித்தார். அன்றைய காலத்தில் வடக்கு கிழக்கு மக்கள்மீது இனவெறுப்பு கொண்ட பல பேச்சுக்களையும் அவர் பேசினார்.
இதனால் ஈழத் தீவில் இருந்த ஒரு தொன்மையான நூலகம் 97ஆயிரம் புத்தகங்களுடன் சிங்களப் பேரினவாதிகளால் எரித்து அழிக்கப்பட்டது. ஒரு இனத்தின் பாரம்பரிய அடையாளத்தை அழித்தால் அது எத்தகைய விளைவுகளைத் தரும் என்பதற்கு இந்த நூலக எரிப்பைத் தொடர்ந்து ஈழ விடுதலை இயக்கங்களில் இணைந்த போராளிகள் சாட்சிகளாகின்றனர். இதைப்போல பல தொன்மையான இடங்கள் ஈழத்தில் அழிக்கப்பட்டுள்ளன.
போரின்போது தமிழ் மக்களின் ஆலயங்கள், நூலகங்கள், பண்பாட்டு மண்டபங்கள், சிலைகள் எனப் பல தொன்மைச் சான்றுகளை இலங்கை அரச படைகள் அழித்துள்ளனர். மிகத் திட்டமிட்ட ரீதியில் அழித்துள்ளதுடன் தமிழ் நிலத்தின் அடையாளத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக புத்தர் சிலைகளையும் விகாரைகளையும் இராணுவத்தினர் அமைத்துள்ளனர். இன்றும் தொல்லியல் திணைக்களம் தமிழர் நிலத்தில் உள்ள ஆலயங்களை விகாரைகளாக மாற்றிவிடத் துடிப்பதை கண்டு நொந்தபடி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
உலகச் சட்டத்தை மீறாதீர்கள்!
இலங்கையில் அண்மைய நாட்கள் வரையில் யாழ் நூலக எரிப்பு பேசப்படுகிறது. இலங்கையின் அதிபர் அனுரகுமார திசாநாயக்க யாழ் நூலகத்தை எரித்தவிடயத்தை தன்சார்ந்த ஆட்சியின் தேவைக்காக பேசியிருந்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசினர் பலரும் அதனைப் பேசுகின்றனர். யாழ் நூலகத்தை எரிப்பதும் ஒன்றுதான் தமிழர் நிலத்தில் இப்போது ஒரு ஆலயத்தை அழிப்பதும் பௌத்த விகாரைகளை அமைப்பதும் ஒன்றுதான்.
பாரம்பரியத்தை அழிப்பதற்காகவே இத்தகைய அழிப்புகளும் கட்டுமானங்களும் நடக்கின்றன. அரசியல் செய்வதற்காக தமிழர்களுக்கு நடந்த அநீதிகளைப் பற்றிப் பேசுகின்ற சிறிலங்கா ஆட்சியாளர்கள் தமது ஆட்சியிலும் ஈழ நிலத்தில் பாரம்பரிய அழிப்பை நிகழ்த்துவதுதான் அரங்கேறும் அவலமாகும்.
அண்மையில் 1950களில் பாலமனோகரன் எழுதிய மிஸ்டர் மங் என்ற நாவலின் வெளியீடு முல்லைத்தீவு தண்ணீறூற்றில் இடம்பெற்றது. அந்த நாவலில் பல இடங்களில் குருந்தூர்மலை அய்யனே என மக்கள் வழிபடுவதும் குருந்தூர்மலை அய்யன் உன்னை கைவிடார் என்றும் பேசுகிற வசனங்கள் இருந்தன. குருந்தூர்மலை என்பது சைவத்தின் மரபரிமை இடம்.
குருந்தூர்மலை என்பது சைவத்தின் பாரம்பரிய இடம். இன்று அதன் அடையாளத்தை அழிக்கும் விதமாக அதன் வரலாற்றை அழிக்கும் விதமாக அதன் பாரம்பரியத்தை அழிக்கும் விதமாக பாரிய பௌத்த விகாரை கட்டப்பட்டுள்ளது. இதெல்லாம் பாரம்பரியம் சார்ந்த பன்னாட்டு விதிகளை மீறுகின்ற செயல் அல்லவா? ஈழத்தில் இப்படித்தான் பாரம்பரிய அழிப்புக்கள் நீள்கின்றன. உலகின் எந்த மூலையிலும் இப்படி மரபுரிமை ஒடுக்குமுறைகள் நடக்கக் கூடாது. அது அம் மண்ணின் மனிதர்களை உளவியல் ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 18 April, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
