“கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியக் கூடாது”! ஆளுநரின் கருத்துக்கு மக்கள் முன்னணி பதிலடி
தீவகப் பெண்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் வட.மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா (Jeevan thiyagarasa) தெரிவித்த கருத்துக்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமது வன்மையான கண்டனத்தினை தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்னம் சுகாஷ் (Kanagaratnam sugash) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச தலைவரின் முகவரான ஆளுநர் தமிழர்கள் மத்தியில் பண்பாட்டுப் படுகொலையை முன்னெடுக்கும் நிகழ்ச்சி நிரலோடுதான் வந்திருக்கிறாரோ என்ற நியாயமான சந்தேகத்தை அவரின் கருத்துக்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.
தமிழர்களின் தனித்துவமான பண்பாட்டு கலாசார இனத்துவ அடையாளங்ளைப் பேணுவதில் தீவகப் பெண்கள் ஏனைய தமிழ்ப் பெண்களை விட எந்தவகையிலும் இம்மியும் குறைந்தவர்களல்ல.
கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியக் கூடாது ஆளுநர் அவர்களே! தீவகப் பெண்களைப் பற்றிக் கருத்துக் கூறுவதற்கு முன் தங்கள் வீட்டைத் திரும்பிப் பார்க்குமாறு விநயமுடன் வேண்டுகின்றோம்.
நாங்கள் கூறவரும் கருத்தைப் புரிந்து கொள்வீர்களென்று நம்புகின்றோம்! என அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.