ரத்னதேரரின் விடாப்பிடியால் கலைந்தது ஞானசாரதேரரின் கனவு
தற்போது தான் வகித்துவரும் நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகப்போவதாக சமுக வலைத்தளங்களில், வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானதெனவும் ஒருபோதும் நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்யப் போவதில்லை எனவும் அபே ஜனபல கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக, தான் எந்தவொரு தரப்புடனும், எந்தவொரு இணக்கப்பாட்டையும் எட்டவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான், நாடாளுமன்ற பதவியை, தனது பதவிக் காலம் முழுவதும் தொடர எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதே வேளை அபே ஜனபல கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தனக்கு கிடைக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நேற்றைய தினம் காணொளியொன்றின் ஊடாக அறிவித்திருந்தார். ஜுன் மாதம் 5ம் திகதியுடன், அத்துரலியே ரத்ன தேரருடைய நாடாளுமன்ற பதவி காலம் நிறைவு பெற வேண்டும் எனவும், அதன் பின்னர் அந்த உறுப்புரிமை தனக்கு கிடைக்க வேண்டும் எனவும் தமக்குள் ஏற்கனவே இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தன்னுடன் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டிற்கு அமைய, அத்துரலியே ரத்ன தேரர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
எனினும், தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதவி விலக போவதில்லை என அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.