வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஐ.நா செயலாளர் முன்னிலையில் கோட்டாபயவின் திட்டவட்ட பேச்சு!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு இறப்புச் சான்றிதழை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஐ.நா பொதுச் செயலாளரிடம் சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸிற்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸை நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவம் குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் எடுத்துரைத்துள்ளார். அத்தோடு தற்போது முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயன்முறை உள்ளிட்ட உள்நாட்டு பிரச்சினைகள் குறித்து ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுச் செயலாளருக்கு விளக்கமளித்துள்ளார்.
அத்தகைய நடவடிக்கைக்காக ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் ஆதரவை வழங்கும் என ஐ.நா பொதுச் செயலாளர் உறுதியளித்துள்ளார். 2009ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வழிகாட்டுதலின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட பாரிய அபிவிருத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு போன்ற விடயம் குறித்தும் சிறிலங்கா ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.
பயங்கரவாத நடவடிக்கைகளில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பல இளைஞர்கள், தான் ஆட்சிக்கு வந்த பிறகு விடுவிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சிறிலங்காவின் உள்நாட்டுப் பிரச்சினைகள் உள்ளக பொறிமுறையின் ஊடாக தீர்க்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியறுத்திய ஜனாதிபதி புலம்பெயர் தமிழர்களை கலந்துரையாடலுக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.