காலிமுகத்திடல் தாக்குதல்தாரிகளை தடுத்து நிறுத்த உத்தரவிட்ட கோட்டாபய
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த சென்றவர்களை தடுத்து நிறுத்துமாறு அரச தலைவர் கோட்டாபய உத்தரவிட்டதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 9ஆம் திகதியன்று, அலரிமாளிகையில் இருந்து புறப்பட்டவர்கள், காலிமுகத்திடலுக்கு தாக்குதல் நடத்த செல்லும்போது அதனை நிறுத்துமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.இதனை மேல் மாகாணத்துக்கான காவல் துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோனே கூறியுள்ளார்.
தேசபந்து தென்னக்கோன், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அளித்த சாட்சியத்தின்படி, இந்த தகவல் வெளியாகியுள்ளது என்று விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
அலரிமாளிகையில் இருந்து காலிமுகத்திடலுக்கு தாக்குதல்களை நடத்த சென்ற குழுவினரை கண்ணீர் புகைப்பிரயோகம் செய்து நிறுத்துவதற்கு தென்னக்கோன் நடவடிக்கை எடுத்தபோதும் பாதுகாப்பு செயலாளரும், காவல்துறை மா அதிபருமே அந்த குழுவினரை காலிமுகத்திடலுக்கு செல்ல அனுமதித்ததாக விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இதன்போது காவல்துறை மா அதிபர், தென்னக்கோனுடன் தொடர்புகொண்டு வினவியபோது, அரச தலைவரின் உத்தரவை தென்னக்கோன் அவரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து தேசபந்து தென்னக்கோன், பாதுகாப்பு செயலாளருடன் தொடர்பு கொண்டபோது, இது அண்ணன்- தம்பி பிரச்சினை. எனவே காவல்துறை தெரியாதது போன்று இருக்குமாறு கேட்டுக்கொண்டதாக தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்தார்.
எனவே நாட்டில் ஏற்பட்ட வன்முறைக்கு பொறுப்பானவர்கள் அனைவரும் தண்டிக்கப்படவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.