சர்வதேச மத்தியஸ்தத்துடன் கோட்டாபயவுடன் பேசத்தயார் - புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அறிவிப்பு
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் பேச்சு நடத்த தயாரென சிறிலங்கா அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவில் தெரிவித்திருந்த நிலையில், சர்வதேச மத்தியஸ்தம் மூலம் பேச்சு நடத்த தயாரென புலம்பெயர் 08 தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
கனேடிய தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ்,நோர்வே ஈழத்தமிழர் அவை, அயர்லாந்து தமிழர் பேரவை,தென்னாபிரிக்க அமைதி மற்றும் நீதிக்கான ஒற்றுமை குழு, பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை, அமெரிக்க தமிழர் செயற்பாட்டுக்குழு ஆகிய எட்டு புலம்பெயர் அமைப்புக்களே இவ்வாறு தெரிவித்துள்ளன.
பிரித்தானியா,அமெரிக்கா,இந்தியா ஆகிய நாடுகளில் ஒன்று அல்லது இணைந்த சர்வதேச மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசுடன் பேச முடியுமென இந்த அமைப்புகள் தீர்மானித்துள்ளன. எனினும் பொறுப்புக்கூறலில் உள்ளகப்பொறிமுறை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்கின்ற சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டை முற்றாக நிராகரிப்பதாகவும் இந்த எட்டு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் முடிவெடுத்துள்ளன.
சிறிலங்கா அரச தலைவரின் அழைப்பை தாராள மனப்பான்மையின் வெளிப்பாடாக நாம் நம்பவில்லை.சர்வதேச சமுகம் சிறிலங்காவின் நிலைப்பாட்டில் மிகவும் இறுக்கமாக உள்ளது.சர்வதேச சமுகத்தை இந்த நிலைப்பாட்டுக்கு கொண்டு சென்றதில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பங்களிப்பு மிகவும் காத்திரமானது.
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை ,சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் நிறுத்தப்படலாம் என்ற பாரிய அச்சம் சிறிலங்காவுக்கு உள்ளது. இதனாலேயே புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை அவர் பேச்சுக்கு அழைத்துள்ளார் என பிரித்தானிய தமிழர் பேரவையின் முக்கியஸ்தர் ஒருவர் ஐ பி சி தமிழுக்கு தெரிவித்தார்.
அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை, வடக்கு ,கிழக்கில் படைத்தரப்பு ஆக்கிரமித்த நிலங்கள் விடுதலை, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம்,பௌத்த ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட வேண்டும்,காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடைநீக்கம் மற்றும் இலங்கையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடனும் பேச்சு நடத்தப்படவேண்டும் ஆகிய விடயங்களை நடைமுறைப்படுத்தி சிறிலங்கா அரசாங்கம் தனது நல்லெண்தை வெளிப்படுத்த வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.