பதவியில் தொடரும் தார்மீக உரிமை அரசாங்கத்திற்கு இல்லை - அசோக அபேசிங்க
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தாம் எடுத்த தீர்மானங்களினால் நாடு வீழ்ச்சியடைந்துள்ளதாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், பதவியில் தொடர்ந்தும் இருப்பதற்கான தார்மீக உரிமை இந்த அரசாங்கத்திற்கும் அரச தலைவருக்கும் இல்லையெனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க (Ashoka Abeysinghe) தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய நிலைமைக்கு அரசாங்கமே பொறுப்பென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அசோக அபேசிங்க தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
''நாட்டின் தற்போதைய நிலைமைக்கு தற்போதைய அரசாங்கமே பொறுப்பு என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டு மத்தியில் இருந்து எதிர்க்கட்சியாகிய நாங்கள் இதைத் தான் கூறி வருகின்றோம்.
இன்று அது ஆழமான பாதாளத்திற்குச் சென்றது மட்டுமன்றி மக்கள் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அரச தலைவர், தாம் எடுத்த தீர்மானங்களினால் எமது நாடு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் எனவே பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகவும் அரச தலைவர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்கு ஆரம்பத்தில் போகாதது போன்ற தவறுகளை ஒப்புக்கொண்டதுடன், நாட்டில் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அரச தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இரண்டு வருடங்களின் பின்னர் நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டமைக்கு அவரே பொறுப்பு. அரச தலைவர் பதவியில் நீடிக்க அவருக்கு தார்மீக உரிமை இல்லை. 6.5 மில்லியன் டொலர்களை பெறாத உரத்திற்காக கொடுத்து மக்களின் பணத்தை வீணடித்ததற்கு அரச தலைவர் பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.