கோட்டாபயவின் கருத்துக்களால் வீண் குழப்பம் வேண்டாம் - அமைச்சர் கெஹலிய தகவல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கவில்லை. ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்படுகின்றன.
எனவே இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் வீணாகக் குழப்பமடையத் தேவையில்லை. இவ்வாறு ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களின் செயற்பாடுகள் தொடர்பிலேயே அண்மையில் ஜனாதிபதி கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இதனை ஊடகவியலாளர்களுக்கோ அல்லது அதனுடன் தொடர்புடையவர்களுக்கோ அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக கருத முடியாது.எனவே இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் வீணாக குழப்பமடையத் தேவையில்லை.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கழுவேவா தனிப்பட்ட காரணத்திற்காகவே பதவி விலகியுள்ளார்.
தொழிற்துறையில் அடுத்த கட்ட நகர்வுகளை நோக்கிச் செல்வதற்கான வாய்ப்புக்கள் அவருக்கு கிடைக்கப் பெறும் போது அதற்கு நாம் இடமளித்துள்ளோம் எனத் தெரிவித்தார்.