கோட்டாபயவின் பக்குவமே தவிர இயலாமை அல்ல - இப்படிக் கூறி சமாளிக்கும் அரசாங்கம்
நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனமையை தோல்வியெனக் கருத முடியாது என அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அழகப்பெரும (Dullas Alagaperuma) தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளதாக அரச தலைவர் தெரிவித்துள்ளமை பக்குவமானதே தவிர இயலாமை அல்ல எனவும் இதனை அரசாங்கத்தின் இறுதி காலத்திற்கான அறிகுறியாகக் கருத முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் அரசாங்கத் தகவல் திணக்களததில் நடைபெற்றுள்ளது.
இதன் போது ஊடகவியலாளர் ஒருவரினால் அரச தலைவரினால் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து தொடர்பில் வினவிய போது அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,,
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) எந்தவொரு இடத்திலும் தான் தோல்வியடைந்துள்ளதாகக் கூறவில்லை. 'மக்கள் 69 இலட்சம் வாக்குகளை வழங்கி அரசாங்கத்தின் மீது கொண்டிருந்த எதிர்பார்ப்புக்களை அதே போன்று நிறைவேற்ற முடியாமல் போயுள்ளமையை நானும், அமைச்சரவையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்றே தெரிவித்திருந்தார்.
அதனைத் திரிபுபடுத்துவது பொருத்தமற்றது. எனவே ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால் அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டமை பக்குவமானதே தவிர இயலாமை அல்ல. எனவே அரசாங்கத்தின் இறுதி காலத்திற்கான அறிகுறியாகக் கருத முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.