இரத்தத்திலும் பிணத்திலும் ஆட்சிக்கு வந்ததே இந்த அரசாங்கம் - சஜித் சாடல் (படங்கள்)
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இரத்தத்திலும் பிணத்திலும் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திற்கு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் சூழ்ச்சியாளர்களை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆணையை மதித்து உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பற்றிய உண்மையை வெளிப்படுத்துங்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொரளையிலுள்ள அனைத்து புனிதர்களின் தேவாலய (All Saints' Church) கட்டிடத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக அண்மையில் தகவல் வெளியாகி இருந்த நிலையில் இது தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் இன்று காலை தேவாலயத்திற்குச்சென்றிருந்தார்.
இதன்போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,
தேர்தல் வெற்றிக்காக அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கான பிரதான சூத்திரதாரிகளை கண்டறிவதும் அதில் முன்னிலைக் காரணியாக இருந்தது.
இந்த உறுதிமொழி பெரும் குழப்பத்தையும் சந்தேகத்தையும் இன்று ஏற்படுத்தியுள்ளதாகவும் தற்போது நடப்பது மந்தமான மற்றும் சந்தேகத்திற்குரிய விசாரணை செயல்முறையாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.