நேரத்தை வீணடிக்கும் அரச ஊழியர்கள் - கணக்கெடுப்பில் கண்டுபிடிப்பு
நிதியமைச்சகத்தால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 30 முதல் 40 சதவீத அரசு ஊழியர்கள் தங்கள் நேரத்தை வீணடிப்பதாக தெரியவந்துள்ளது.
இதன்படி உறக்கநிலையில் இருப்பவர்கள் மற்றும் கடமைகளில் பங்களிப்பு செய்யாதவர்களை இனங்கண்டு, அவ்வாறான நிலைமைகளைத் தடுப்பதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
நிறுவனங்களின் தலைவர்களுக்கு சிறப்புப் பொறுப்புகள் வழங்கவும், அந்தப் பொறுப்புகளை நிறைவேற்றாத தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சில நிறுவனங்களின் சூழல் கட்டமைப்பு ரீதியாக இவ்வாறான செயலற்ற நிலைக்கு சாதகமாக இருப்பதாகவும், எதிர்காலத்தில் அவ்வாறான நிறுவனங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படும் எனவும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பணியாளர்கள் தமது கடமைகளுக்கு இயன்றளவு பங்களிப்பை வழங்குவதை உறுதிப்படுத்துவது நிறுவனத் தலைவரின் பொறுப்பாக இருக்க வேண்டும் என நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.