CID க்கு நெருக்கடி கொடுக்கும் அநுர அரசின் அமைச்சர்கள்
அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள், தங்கள் அரசியல் கருத்து வேறுபாடுகளை தொடர்ச்சியாக குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் முறைப்பாடளித்து வருவதாக குறித்த பிரிவின் தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் வழங்கப்பட்டு வருவதால் குறித்த முறைப்பாடுகளை விசாரிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவதூறு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் நீதிமன்றங்கள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனினும், இந்த முறைப்பாடுகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், அவற்றை விசாரிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணையில் சிக்கல்
குற்றவியல் அவதூறு சட்டம் நாட்டில் இன்னும் செயல்படுத்தப்படாததால், சந்தேகநபர்களை விசாரணைக்கு அழைப்பது கூட ஒரு சிக்கலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குற்றப் புலனாய்வுப் பிரிவில் அதிக எண்ணிக்கையிலான விசாரணைகள் நடத்தப்படும் போது, அவற்றுக்கான விசாரணை அதிகாரிகள் குறைவாக இருக்கும் சந்தர்ப்பத்தில், குறித்த விசாரணைகளுக்கு அதிகாரிகளை நியமிப்பது சிக்கலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது வரையில் சுமார் 10 அரசாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
