ரணிலுக்கு அரசாங்கம் பதிலடி
இலங்கை தற்போது சந்தித்துள்ள பெரும் நெருக்கடி நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுவதே சிறந்தது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து தொடர்பில் அரசாங்கம் இன்று பதிலளித்துள்ளது.
இதன்படி நாட்டின் பொருளாதார நிலைமையை சீர் செய்ய சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டிய அவசியம் கிடையாது என நிதி மூலதனச்சந்தை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
இலங்கை பெற்றுக் கொண்டுள்ள அரச முறை கடன்களை மீள செலுத்துவதில் எவ்வித நெருக்கடி நிலைமையும் ஏற்படாது. 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிலிருந்து. அரச முறை கடன்களை உரிய காலத்தில் திருப்பி செலுத்தியுள்ளோம். எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய கடன்களை முறையாக செலுத்துவதற்கு உரிய திட்டங்கள் அனைத்து துறைகளையும் அடிப்படையாக கொண்டு வகுக்கப்பட்டுள்ளன.
நாட்டின் தேசிய பொருளாதார நிலைமை மற்றும் அந்நிய செலவாணி துறை குறித்து முன்னாள் பிரதமர் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிடும் கருத்துக்கள் முற்றிலும் அடிப்படையற்றவை.
சுற்றுலா பயணிகளின் வருகை, வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல், ஏற்றுமதி நிலைமைகள் ஆகிய காரணிகள் அந்நிய செலவாணி துறையில் பிரதான பங்கு வகிக்கின்றன எனத் தெரிவித்தார்.