தேர்தல் முறை தொடர்பில் ஆராய குழுவொன்று நியமனம்
தேர்தலின் போது வேட்பாளர் ஒருவர் அதிக பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் ஏற்படாத வகையில் தேர்தல் முறையை உருவாக்குவது குறித்து ஆராய குழுவொன்று நியமிக்க எதிர்பார்ப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக இளைஞர் குழுவொன்றுடன் அதிபர் அலுவலகத்தில் நடந்த சந்திப்பில் அதிபர் இதனைக் கூறியுள்ளார்.
அசாதாரணமான பொருளாதார நிலை

புதிய வரிகள் காரணமாக வெளிப்படைத்தன்மை பாரிய பிரச்சினையாக காணப்படுவதாகவும், திடீரென தமது சம்பளத்தில் பெரும் பகுதியை செலுத்த வேண்டியிருப்பதனால் மக்கள் அதனை கடுமையான ஒன்றாக உணர்வதாகவும் இளைஞர் குழு , அதிபரிடம் சுட்டிக்காட்டியது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அதிபர் ரணில் விக்ரமசிங்க, “பெரிய வரவு - செலவுத் திட்டத்தில் அனைத்தும் முறையாக ஒதுக்கப்படுவதால் வெளிப்படைத்தன்மை இருக்கிறது.
எந்தவொரு வரவு - செலவுத் திட்டத்திலும், பணம் முறையாக செலவிடப்படுவதை நாடாளுமன்றமே உறுதி செய்கிறது. எனவே, நாடாளுமன்றம் தனது அதிகாரங்களை தற்போதே பயன்படுத்த வேண்டும்.
இலங்கை அசாதாரணமான பொருளாதார நிலையில் இருக்கிறது. அதிலிருந்து மீள கடனை மறுசீரமைக்க வேண்டியுள்ளது. கடனை மறுசீரமைக்க, செலவுகளைக் குறைக்கவோ அல்லது அதற்கான பணத்தைத் தேடவோ வேண்டும்.
மின் கட்டண உயர்வு

அதன் அடிப்படையிலேயே அண்மையில் மின் கட்டணத்தை உயர்த்த நேரிட்டது. இவ்வாறு செய்தாலும் மின்சார சபை நட்டத்தை எதிர்கொள்கிறது.
இந்தச் சூழ்நிலையில் இருந்து மீள வேண்டுமானால், சில விடயங்களை விருப்பமின்றி கூட செய்ய வேண்டியிருக்கும்” - என்று தெரிவித்துள்ளார்.