கிழக்கு முனையத்திற்கு பதிலாக மேற்கு முனையத்தை குறி வைக்கும் அரசாங்கம்
கிழக்கு முனையத்திற்கு பதிலாக மேற்கு முனையத்தை சர்வதேச முதலீட்டாளர்களுடன் இணைந்து அபிவிருத்தி செய்யவே நாம் முயற்சிக்கின்றோம் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இதை தெரிவித்தார். கடந்த அரசாங்கம் செய்துகொண்ட கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பான ஒப்பந்தத்தை இந்த அரசாங்கத்தினால் கிழித்தெறிய முடியாதெனவும் தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்க காலத்தில் இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் இராஜதந்திர ஒப்பந்தங்கள் இரண்டு செய்து கொள்ளப்பட்டிருந்தது. அந்த ஒப்பந்தத்தை இந்த அரசாங்கத்தினால் கிழித்தெரிய முடியாது. இதனால் கிழக்கு முனையம் விடயம் தொடர்பாக அரசாங்கம் தொடர்ந்தும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா பெயர் குறிப்பிட்டுள்ள குறித்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து தீர்வொன்றை எட்டும் குழுவொன்றை நியமிக்கவும் அமைச்சரவை பத்திரத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறு இருப்பினும் துறைமுக அபிவிருத்தியில் முதலீட்டாளர்களுடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தையில் இலங்கைக்கு அதிக சாதகமான வகையிலேயே பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தோம். ஆனால் அரசாங்கம் முன்வைத்த யோசனைகளுக்கு இந் நிறுவனம் இணக்கம் தெரிவிக்கவில்லை.
அதனால்தான் கிழக்கு முனையத்திற்கு முதலீட்டாளர்களை கொண்டுவரும் திட்டத்திலிருந்து நாம் விலகிக் கொண்டோம்.
எவ்வாறு இருப்பினும் கிழக்கு முனையத்தை நூறுவீத நிருவாகமும் துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டுவருவதாக அரசாங்கம் தீர்மானமொன்றை எடுத்துள்ளது என்றார்.