தினமும் பறிபோகும் நூற்றுக்கணக்கான மனித உயிர்கள் - அரசாங்கம் மீது பாயும் எதிர் கட்சி
தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி ஆட்சிக்கு வந்த பிறகு, மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு இழக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மனித உயிர்கள் வீணாக பலியாகிக்கொண்டிருக்கும் நேரத்தில் மக்களின் உணவு பாதுகாப்பு கடுமையான நெருக்கடியில் உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
உரம் தொடர்பான தன்னிச்சையான முடிவின் காரணமாக உணவுப் பாதுகாப்பு தொடர்பாக கடுமையான நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
இன்று, வட மத்திய மாகாணம்,அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சோளப்பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் அடுத்த பருவச் செய்கை குறித்து சிந்திக்கிறார்கள்.
தேயிலை பயிர்ச்செய்கை விவசாயி தொடர்ந்து தேயிலை பயிரிடுவதா என்பதில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நாளை நெல் பயிரிடுவதா என்று நெல் விவசாயிகள் மீண்டும் யோசிக்கிறார்.
வணிக விவசாயத்தில் ஈடுபட்டுள்ள சோளச் செய்கை விவசாயிகள் கடுமையான பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.
சோளத் தண்டுகள் கால்நடைகளின் தீவனமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அடுத்த ஆண்டுக்குள், சோளத்தண்டுகள் கால்நடைகளுக்கு இழக்கப்பட்டு பால் உற்பத்தி பாதிக்கப்படலாம். அப்போது இந்த நாட்டில் பால் உற்பத்தியும் குறைந்து கடுமையான பிரச்சினை எழும்.
விவசாய இரசாயனப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ள வர்த்தமானி அறிவிப்பை அமைச்சரவை ஊடாக மாற்றியமைத்து ஒரு நிறுவனம் மாத்திரம் விவசாய இரசாயனப் பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தயாராகி வருகின்றது.
யாருடைய தேவையின் நிமித்தம் மீளவும் தனது கஜமித்துரு நண்பர்களை போஷிப்பதற்கான முயற்சியில் மீண்டும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
விவசாய இரசாயனப் பொருட்களை இறக்குமதி செய்யும் 29 நிறுவனங்களில் ஒரு நிறுவனத்திற்கு மட்டும் ரூ.10 பில்லியன் மதிப்புள்ள இரசாயனப் பொருட்களை இறக்குமதி செய்ய யாருடைய தேவையின் நிமித்தம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கம் பாகிஸ்தானிலிருந்து அரிசியைக் கொண்டு வந்தது. கன உலோகக்கலவை இருப்பதால் மக்கள் நோய்வாய்ப்படுவதால் இரசாயன உரங்கள் தடை செய்யப்பட்டன.
பாகிஸ்தானிலிருந்து இப்படித்தான் காபனிக் அரிசி தான் இறக்குமதி செய்யப்பட்டதா? அரிசியில் கன உலோகக்கலவை இல்லையா? சிறுநீரக நோயாளிகளாக மக்கள் மாறலாம் என்று அரசாங்கம் மக்களின் இதயங்களுடன் பேசி, இன்று அவர்கள் பிரச்சனையில் உள்ளனர்.
மரக்கறி விவசாயிகள் நாளைக்குள் காய்கறிகளைப் பயிர் செய்வதாக இல்லாவிட்டால், குறைந்து வரும் மரக்கறி உற்பத்தியில் உள்ள இடைவெளியை எப்படி நிரப்ப முடியும்?
அந்த மரக்கறிகளில் சிலவற்றை நீங்கள் இறக்குமதி செய்யப்போகிறீர்களா? காபனிக் மரக்கறிகளையா இறக்குமதி செய்யப்போகிறீர்கள்? அவ்வாறு காபனிக் மரக்கறிகளை இறக்குமதி செய்ய அரசாங்கத்திடம் பணம் இருக்கிறதா?
டொலர் பற்றாக்குறையால் எரிபொருள் கொள்வனவிற்கு பங்களாதேஷிடம் கடன் பெரும் அரசாங்கத்தால் அரிசி மற்றும் மரக்கறிகளை இறக்குமதி செய்ய அரசாங்கத்திடம் டொலர் இருக்கிறதா? அப்படி நடந்தால் இந்த நாட்டில் ஒரு ஆபத்தான சூழ்நிலை உருவாகலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.