பொறுப்புக்கூறத் தவறிய அரசாங்கங்கள்! சர்வதேச விசாரணை கோரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்
வடக்கு - கிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2017 பிப்ரவரி 20ஆம் தேதி கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 3,287 நாட்களை கடந்துள்ளது.
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெற்ற இறுதி யுத்த நிகழ்வுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாய்மார்கள், யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்தும் எங்கள் பிள்ளைகளின் நிலைமை குறித்து எந்த அரசும் தெளிவான பதில் அளிக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.
பொறுப்புக்கூறல்
சரணடைந்தவர்கள், வெள்ளை வான்களில் கடத்திச் செல்லப்பட்டவர்கள், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என பல ஆயிரக்கணக்கானோரின் நிலை இன்று வரை தெரியவில்லை என தெரிவித்தனர்.

யுத்தத்திற்குப் பின்பு ஆட்சிக்கு வந்த ஐந்து அரசுகளும் பொறுப்புக்கூறத் தவறிவிட்டன. குற்றத்தை ஏற்றுக்கொள்ளாமலும், இராணுவத்தைப் பொறுப்புக்கூறச் செய்யாமலும் இருக்கும் நிலையில் உள்நாட்டு விசாரணைகளால் நீதி கிடைக்காது என அவர்கள் வலியுறுத்தினர்.
சமீபத்தில் மீண்டும் கவனம் பெற்றுள்ள செம்மணி புதைகுழி அகழ்வுப்பணிகள் குறித்து அவர்கள் கவலை வெளியிட்டனர்.
கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களுக்கு சர்வதேச நிபுணர்கள் பங்களிப்புடன் துல்லியமான நீதியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். புதைகுழிகள் மூடப்படாமல், சான்றுகள் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கு சர்வதேச தலையீடு அவசியம்.
போராட்டக்காரர்கள் கூறுவதாவது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சாட்சிகளாக இருந்த 400-க்கும் மேற்பட்ட தாய் - தந்தையர்கள் தங்கள் பிள்ளைகளின் நிலை அறியாமலேயே மரணமடைந்துள்ளனர்.
நாங்களும் முதிர்ந்த வயதில் இருக்கிறோம். இறப்பதற்கு முன் எங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய விரும்புகிறோம் என அவர்கள் உணர்ச்சியுடன் தெரிவித்தனர்.
கோரிக்கை
எனவே இவ்வாறான நிலையில் பின்வரும் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.
1.வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டும்.
2.அரசியல் கைதிகள் நிபந்தனை இன்றி உடனடியாக விடுதலைசெய்யப்படவேண்டும்
3. நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடை சட்டத்தை[P.T.அத்தோடு புதிதாக அமுல்படுத்த இருக்கும் பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்டம் இரண்டு சட்டங்களும் உடனடியாக நீக்கப்படவேண்டும்.
4) இராணுவ முகாம்கள் வட கிழக்கில் மூடப்பட வேண்டும்.
5.வட கிழக்கில் மனித புதைகுழிக்கான அகழ்வு பணியை கண்காணிக்க சர்வதேச நிபுணர்களின் தலையீடுவேண்டும்.
6) பத்திரிகையாளர்கள், மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் புலனாய்வுத் துறையின் அச்சுறுத்தல் உடனடியா நிறுத்தப்பட வேண்டும்.
7)பொளத்த மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும்.
8) எமது தாயகத்தின் வளச் சுரண்டல் நிறுத்தப்படவேண்டும்.
8)அனத்து வகையாக தாயகத்தில் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |