டிஜிட்டல் சேவைகளுக்கான வற் வரி ஒத்திவைப்பு: அரசாங்கம் முக்கிய முடிவு
இலங்கையில் மின்னணு தளங்கள் மூலம் வெளிநாட்டு நபர்கள் வழங்கும் சேவைகளுக்கான பெறுமதி சேர் வரியை (VAT) நடைமுறைப்படுத்துவதற்கான திகதியை அரசாங்கம் திருத்தியுள்ளது.
முன்னர் 2025 ஒக்டோபர் இல் திட்டமிடப்பட்டிருந்த குறித்த வரிக்கான நடைமுறை திகதி, தற்போது ஏப்ரல் 2026 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சரவைக்கு பின்னர் இன்று ஊடக சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ, குறிப்பிட்ட டிஜிட்டல் சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கைகள் காரணமாக இவ்வாறு திகதி ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
நாணய நிதியத்துடன் பேச்சு
அரசாங்கம் அவர்களுடன் தொடர்பு கொண்டதாகவும், அதன் போது அவர்கள் இது தொடர்பாக தயாராக நேரம் கோரியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விடயத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகவும் அமைச்சர் ஜெயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
"இது தொடர்பான குறைபாடுகளை நாங்கள் சரிசெய்வோம், அதன் பிறகு VAT வரி அறிமுகப்படுத்தப்படும். எனவே, நடைமுறைப்படுத்தும் திகதி ஒத்திவைப்பு" என்று அவர் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
