பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான புதிய சுற்றறிக்கை : கிடைத்தது அனுமதி
நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான புதிய சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பாடசாலைகளில் 5 மற்றும் 6 ஆம் தரங்கள் தவிர்ந்த தரம் 2 தொடக்கம் தரம் 11 வரை மாணவர்களை உள்வாங்குவதற்கு ஏற்ற வகையில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைச் சுற்றறிக்கைகளை இரத்துச்செய்து, அதற்குப் பதிலாக புதிய சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டது.
உத்தேசிக்கப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்துவதற்காக வகுப்பறையொன்றிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை அங்கீகரிக்கப்பட்டுள்ள எல்லைக்குள் மாத்திரம் பேண வேண்டியது அவசியமாகும்.
பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனை
அதனால், நாட்டிலுள்ள அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்விக்கான உரிமையை உறுதிப்படுத்தி, பாடசாலைகளில் 5 மற்றும் 6 ஆம் தரங்கள் தவிர்ந்த இடைநிலைத் தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கு வாய்ப்புக்களை வழங்குவதற்காக சரியான முறையை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது.
குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, இடைநிலைத் தரங்களில் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தற்போது கல்வி கற்கும் பாடசாலையிலிருந்து வேறு பாடசாலைக்கு உள்வாங்குவதற்கு உண்மையான தேவையாகவுள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் வகையில் பாடசாலைக்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனை செயற்குழுவால் நியமிக்கப்பட்டுள்ள உபசெயற்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளையும் கருத்தில் கொண்டு, புதிய ஆலோசனைச் சுற்றறிக்கையை வெளியிடுவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
