விவசாயியிடம் இலஞ்சம் பெற்ற அரச ஊழியருக்கு நேர்ந்த கதி
விவசாயி ஒருவரிடம் 50 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த உத்தியோகத்தரை மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் இன்று புதன்கிழமை (05) பகல் செங்கலடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 34 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவு
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சித்தாண்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் வயலுக்கு உரம் பெற்று தருவதாகவும் அத்துடன் மழை வெள்ளத்தால் வேளாண்மை சேதமடைந்ததற்கு நஷ்டஈடு பெற்று தருவதாகவும் அதற்கு 50 ஆயிரம் ரூபா பணத்தை விவசாயிடம் இலஞ்சமாக கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கோரியுள்ளார்.
இதனையடுத்து குறித்த விவசாயி கொழும்பிலுள்ள (Colombo) இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரிடம் முறைப்பாட்டையடுத்து அவர்களின் ஆலோசனைக்கமைய சம்பவ தினமான இன்று பகல் செங்கலடி பகுதியிலுள்ள வங்கி ஒன்றிற்கு அருகாமையில் கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் விவசாயிடம் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் 50 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட நிலையில் அங்கு மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் சுற்றிவளைத்து கைது செய்ததுடன் இலஞ்சமாக பெற்றுக் கொண்ட 50 ஆயிரம் ரூபாவை மீட்டனர்.
மேலும் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி கொழும்புக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
