சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து! அரசாங்கத்தை எச்சரிக்கும் தமிழ் எம்.பி
செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட சோமரத்னராஜபக்சவின் (Somaratne Rajapakse) உயிருக்கு சிறையில் ஆபத்து ஏற்படுமானால் அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களின் மனங்களில் அழியா இடம்பிடித்திருக்கின்ற செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் ஏற்கனவே குற்றவாளியாக சோமரத்ன ராஜபக்ச சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
ஏற்கனவே செம்மணி பகுதியில் சுமார் அறுநூறு உடல்கள் வரை புதைக்கப்பட்டுள்ளதாக அவர் வழங்கிய வாக்குமூலம் ஒன்று காணப்படுகிறது.
அநுரவுக்கு அனுப்பப்பட்ட கடிதம்
செம்மணியில் சுமார் 300 பேரை தலையாட்டி மூலம் கொண்டுவரப்பட்டு கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் சிறையில் உள்ள தனது கணவர் கொல்வதற்கான உத்தரவுகளை பிறப்பித்த நபர்கள் தொடர்பில் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக அவரின் மனைவி ஜனாதிபதி அனுரவுக்கு (Anura Kumara Dissanayake) கடிதம் எழுதியதாக ஊடகங்களில் பார்த்தேன்.
எம்மை பொறுத்தவரையில் சோமரத்ன ராஜபக்ச ஒரு குற்றவாளி. குற்றவாளி சில விடயங்களை கூறப்போவதாக அவரது மனைவி கூறுகிறார். ஆகவே அவர் என்ன கூறப்போகிறார் என்பதை அறிய வேண்டும்.
அவர் சிறையில் உள்ள நிலையில் அவருக்கு ஏதாவது உயிர் ஆபத்துக்கள் ஏற்படும் ஆனால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்“ என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
