தவணை முறையில் அரிசி வாங்க மக்களை தள்ளிய அரசு - கடுந்தொனியில் சாடும் நாமல்
மக்களைத் தவணை முறையில் அரிசி வாங்கும் நிலைக்குத் தள்ளியதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் விவசாயிகள், மீனவர்கள், தொழில்முனைவோர், தொழில் வல்லுநர்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாகக் குரல் கொடுப்பது எதிர்க்கட்சியின் பொறுப்பு என்று ராஜபக்ச தெரிவித்துள்ளார்
நெலும் மாவத்தையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டத்தில் உரையாற்றிய போதே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தவணை முறையில் அரிசி
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முன்னதாக 1.2 மில்லியன் ரூபாய்க்கு ஒரு டொயோட்டா விட்ஸ் காரை வாங்கலாம் என்றும், இளைஞர்கள் ஜப்பானிய மோட்டார் சைக்கிள்களை வாங்குவதற்கான திட்டங்களை அறிமுகப்படுத்துவதாகவும் அரசாங்கம் உறுதி அளித்திருந்தது.

தற்போது 20 கிலோகிராம் அரிசியை தவணை முறையில் வழங்கும் நிலைக்கு வந்துள்ளது. இதுதான் மக்கள் எதிர்பார்த்த மாற்றமா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
உள்நாட்டு அறுவடைக் காலங்களில் காய்கறிகளையும் பழங்களையும் இறக்குமதி செய்வதன் மூலம், அரசாங்கம் உள்ளூர் விவசாயிகளை மேலும் பாதிப்பிற்கு உள்ளாக்குவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் ஒரு காலத்தில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்காக நாடு இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறி உப்பை இறக்குமதி செய்வதற்காக அரசாங்கத்தை அவர் விமர்சித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |