கனேடிய தமிழர் பேரவையின் முன் மாதிரி
கனடாவில் கனடிய தமிழர் பேரவை ஜியூ போப் இற்கு சிலை திறக்கவுள்ளனர்.
ஜியூ போப் பிறந்து 200 ஆண்டுகள் கடந்த நிலையில் நிறுவப்பட்டுள்ள இந்த சிலை நாளையதினம்(15)திறந்து வைக்கப்படவுள்ளது.
கனடா நாட்டில் உள்ள பிரின்ஸ் எட்வேட் தீவில் 1820 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் திகதி பிறந்தவர் ஜோர்ஜ் உக்லா போப். ஜோன் போப் மற்றும் கதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு மகனாக பிறந்த இவர், குழந்தைப் பருவத்திலேயே இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தவர்.
தமிழ் பயின்ற போப்

அங்கு அவர் ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பெற்றார். 1839 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த ஜியு போப் தனது கப்பல் பயணத்தின்போது தமிழை பயின்றுள்ளார். பின் தூத்துக்குடியில் ஆரியங்காவுப் பிள்ளை மற்றும் இராமானுசக் கவிராயரிடமும் இலக்கண இலக்கியங்களை கற்றுக்கொண்டார். மீண்டும் 1850களில் இங்கிலாந்து சென்ற போப், அங்கு திருமணம் செய்து கொண்டு மீண்டும் தமிழகம் வந்தார்.
திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்

தஞ்சாவூரில் தங்கிய அவர் புறநானூறு, திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களை கற்று அது குறித்து ஆய்வினையும் செய்துள்ளார். மேலும் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.
இப்படி பெரும் சிறப்புகளைக் கொண்ட ஜி.யூ.போப், பிறந்து 200 ஆண்டுகள் (2020 ஆம் ஆண்டுடன்) நிறைவானதை முன்னிட்டு கனடிய தமிழர் பேரவையினர் சிலை நிறுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது..