டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பயனாளியின் நிர்மாணிக்கப்பட்ட வீட்டில் வைத்து அநுர புத்தாண்டு கொண்டாட்டம்
டித்வா சூறாவளியினால் சேதமடைந்து, அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அநுராதபுரம் - கல்நேவ பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட பயனாளி ஒருவரின் வீட்டில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சுபநேரச் சடங்குகளில் இணைந்துகொண்ட அவர், இன்று (14) முற்பகல் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட முகநூல் பதிவில்,
டித்வா அனர்த்தம்
“கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட 'டித்வா' அனர்த்தத்தினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டின் கீழ், ஐந்து மாத காலப்பகுதிக்குள் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

கல்நேவ பிரதேச செயலாளர் பிரிவில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக நிர்மாணிக்கப்படும் ஆறு புதிய வீடுகளில் இதுவும் ஒன்றாகும்.
அத்துடன், இப்பிரதேச செயலாளர் பிரிவில் பகுதியளவில் சேதமடைந்த 66 வீடுகளுக்கான இழப்பீடுகளும் தற்போது வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.
இந்தப்பணிகளை விரைவுபடுத்தி, அனைத்து இலங்கை மக்களுக்கும் மகிழ்ச்சியான தருணமான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியை அந்தக் குடும்பங்களின் உறுப்பினர்களுக்கும் பெற்றுக்கொடுக்க முடிந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
மேலும், பல்வேறு சவால்களுக்குப் பிறகு ஏற்பட்ட உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும், தோல்வியை ஏற்றுக்கொள்ளாது மீண்டும் கட்டியெழுப்பப்படும் இலங்கை மக்களுடன் இணைந்து, ஒரே சுபநேரத்தில் ஒன்றிணையக் கிடைத்தமை பெரும் மகிழ்ச்சியளிக்கிறது” என்றுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |