புத்தாண்டு பிறக்கும் நேரம் மற்றும் கைவிசேடம் செய்ய உகந்த நேரம்
உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் இன்று 'பராபவ' தமிழ்ப் புத்தாண்டை உற்சாகமாகக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கும் நாள் சித்திரையின் முதலாம் நாள் வருடப்பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு தமிழ் புத்தாண்டு தினத்தன்று எம்மவர்கள் புது கணக்கை தொடங்குவார்கள். புதிய விடயங்களையும் ஆரம்பிப்பார்கள். புதிய கலைகளை கற்கத் தொடங்குவார்கள்.
அந்த வகையில் தற்போது பிறக்கவுள்ள பராபவ தமிழ் புத்தாண்டு எப்போது பிறக்கிறது? சுப நேரம் என்ன? என்பதை தெரிந்துகொள்வோம்.
மருத்து நீர் மற்றும் நீராடல்
புத்தாண்டு பிறப்பு வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, இன்று காலை 08:40 க்கு புத்தாண்டு பிறக்கிறது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி: இன்று முற்பகல் 09:32 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது.

புத்தாண்டு தினமான இன்று அதிகாலை 04:40 முதல் நண்பகல் 12:40 வரை மருத்து நீர் வைத்து நீராடுவதற்கு (ஸ்நானம் செய்ய) மிகவும் உகந்த நேரமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புண்ணிய காலம் புத்தாண்டு பிறப்பதற்கு முன்னரான மற்றும் பின்னரான நடுநிலை நேரமான புண்ணிய காலம்: நேற்று இரவு 08:57 க்குத் தொடங்கி, இன்று முற்பகல் 09:45 வரை நீடிக்கிறது. இந்த நேரத்தில் ஆலய தரிசனம் மற்றும் தான தர்மங்களில் ஈடுபடுவது சிறப்பு.
கைவிசேடம்
இன்று காலை 08:47 முதல் 09:04 வரையிலான காலப்பகுதி கைவிசேடம் பரிமாறிக் கொள்வதற்கு உகந்த நேரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புத்தாண்டுக்கான மங்களகரமான ஆடையாக சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் கலந்த ஆடையை அணியப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் சகலருக்கும் சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கும் இனிய ஆண்டாக அமையட்டும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |