யாழ் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டி தீர்க்கும் கனமழை - மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
புதிய இணைப்பு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்றைய தினம் (17) பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரிமனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது.
இதேவேளை மலையக பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை மற்றும் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் - நுவரெலியா மற்றும் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதிகளில் மற்றும் ஏனைய சிறிய வீதிகளிலும் அடர்ந்த பனிமூட்டம் நிலவுகிறது.
இந்த வீதிகளில் வாகனங்களை செலுத்தும்போது, வாகன ஹெட்லைட்களை ஒளிரச் செய்து மெதுவாகவும் கவனமாகவும் வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (17.09.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஏனைய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை
நாட்டின் சில இடங்களில் 50 மி.மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
