வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோருக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி!
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக செல்லும் சில விருந்தகங்களில் அதிகளவான தொகையை அறவிடுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெறும் வரையில் அவர்கள் விருந்தகங்களில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
அவர்கள் தனிமைப்படுத்தப்படும் குறித்த காலப்பகுதிக்கு மாத்திரம் அதிகளவான தொகை அறவிடப்படுவதாக சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தற்போதைய கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நாளாந்தம் 2000 பேர் வரை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு வருகை தரும் இலங்கையர்கள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள், இரண்டு தடுப்பூசிகளை பெற்றிருந்தாலும் அவர்களுக்கு கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கை கிடைக்கப்பெறும் வரையில் விருந்தகங்களில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
தனிமைப்படுத்தும் காலப்பகுதிக்கு மேலதிகமாக கட்டணங்கள் அறவிடப்படுவதாகவும் சுற்றுலாப் பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கட்டுநாயக்க விமானநிலையத்தில் விரைவில் பரிசோதனை அறிக்கையை பெறக் கூடிய ரெப்பிட் பி.சி.ஆர் பரிசோதனை வசதிகள் காணப்படுகின்ற நிலையிலும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.