ஜனாதிபதியின் தந்தையே வந்தாலும் ஒன்றும் நடக்காது - ஹிருணிகா
அடுத்துவரும் தேர்தல்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷவோ, பசில் ராஜபக்ஷவோ மாத்திரமல்ல, அவரது தந்தை டி.ஏ.ராஜபக்ஷ வந்தாலும்கூட, தற்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்புணர்வை இல்லாமல் செய்யமுடியாது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்திருக்கின்றார்.
துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பின் விளைவாக நீதிமன்றத்தீர்ப்பு முற்றிலும் கேள்விக்குட்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறியதிலிருந்து நாட்டிலுள்ள பெண்களும் சிறுவர்களும் தொடர்ச்சியாகப் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுமக்கள் ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில், அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் அதனை மேலும் அதிகப்படுத்தியுள்ளன.
அவற்றுக்குத் தீர்வைப்பெற்றுத்தருமாறு வலியுறுத்தி அண்மைக்காலத்தில் பொதுமக்கள் வீதிகளில் இறங்கித் தொடர்ச்சியாகப் போராடிவருகின்றார்கள்.
இவற்றுக்கு மத்தியில், அடுத்த பொலிஸ்மா அதிபராகும் கனவுடன் இருவர் தமது திறமைகளைப் போட்டிபோட்டுக்கொண்டு ஜனாதிபதியிடம் வெளிக்காட்டி வருகின்றார்கள்.
அவர்கள் அப்பாவிப் பெண்களிடமும் வயது முதிர்ந்தவர்களிடமும் தமது வீரத்தைக் காண்பிக்கின்றார்கள். அவர்கள் இருவருக்கிடையிலான போட்டியினால் அப்பாவிப் பொதுமக்களே பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் .
இவ்வாறானதொரு சூழ்நிலையில் மீண்டும் அடுத்த 5 வருட பதவிக்காலத்திற்காகப் போட்டியிடப் போவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.
அடுத்துவரும் தேர்தல்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவோ, பசில் ராஜபக்ஷவோ மாத்திரமல்ல, அவரது தந்தை டி.ஏ.ராஜபக்ஷ வந்தாலும்கூட, தற்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்புணர்வை இல்லாமல் செய்யமுடியாது என்று தெரிவித்திருக்கின்றார்.