ஹோர்முஸ் கப்பல் போக்குவரத்து! ஓமானில் நடைபெறவுள்ள இராஜதந்திர நகர்வு
ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்துக்கான பாதுகாப்பான வழித்தடங்கள் தொடர்பில் விவாதிக்க, ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளின் பங்கேற்புடன் திங்கட்கிழமை ஓமானில் பிராந்தியக் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈரான் மற்றும் ஓமான் இடையே ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கான பாதுகாப்பான வழித்தடங்களை அமைப்பது தொடர்பாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் - ஓமான் இடையே புரிந்துணர்வு
மேலும், ஹோர்முஸ் நீரிணையில் தற்காலிக கப்பல் வழித்தடங்களை அமைப்பது தொடர்பாக ஈரான் மற்றும் ஓமான் இடையே புரிந்துணர்வு எட்டப்பட்டுள்ளதாகவும் இஸ்மாயில் பாகாயி குறிப்பிட்டுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஈரான் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகின் முக்கியமான கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணை ஊடாக கணிசமான அளவு எண்ணெய் மற்றும் எரிசக்தி வளங்கள் சர்வதேச சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இதனால், இப்பகுதியில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது பிராந்திய நாடுகளுக்கு மட்டுமன்றி, சர்வதேச எரிசக்தி சந்தைக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஓமானில் நடைபெறவுள்ள பிராந்தியக் கூட்டத்தின் மூலம் ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பாகவும் தடையின்றியும் முன்னெடுப்பதற்கான நடைமுறை ஏற்பாடுகள் தொடர்பில் முக்கிய முடிவுகள் எட்டப்படுமா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |