ஞானசார தேரருக்கு வழங்கிய மன்னிப்பு: தெளிவில்லா நிலையில் மைத்திரி
கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த ஜனாதிபதி மன்னிப்பை இரத்து செய்து வெளியிடப்பட்டுள்ள நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் தமக்கு இதுவரை எவ்வித தகவலும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு கங்காராம விகாரையில் இன்று நடைபெற்ற மத நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தாம் எப்போதும் அரசியலமைப்புக்கு அமைவாகவே செயற்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பு
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை இரத்து செய்த நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “அது தொடர்பில் எனக்கு இன்னும் சரியான விபரங்கள் தெரியாது.

அதனால் அதைப் பற்றி இப்போது எதுவும் கூற முடியாது.
ஜனாதிபதி மன்னிப்பு உரிய ஆய்வுகளின் பின்னரே வழங்கப்பட்டது. எனது காலகட்டத்தில் நான் மிகவும் கருணையுடன் அந்த நடவடிக்கையை மேற்கொண்டேன்.
இப்போது எந்த சூழ்நிலையில் இந்த விடயம் உள்ளது என்பது குறித்து என்னால் கூற முடியாது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் எனது அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. எனது பதவிக் காலமும் குறைக்கப்பட்டது. எனது அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.
அதன் பின்னர் என்னைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்கள் மீண்டும் அந்த மாற்றங்களை நீக்கி, 19ஆவது திருத்தத்தில் இருந்த அதிகாரங்களுக்குப் பதிலாக 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தினர்.
அதன் மூலம் ஜனாதிபதிக்கு பெருமளவிலான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, தற்போது அது தொடர்பில் எங்களால் எதுவும் கூற முடியாது.” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |