பலத்த காற்றுடன் கூடிய மழையால் கிளிநொச்சியில் குடியிருப்புகள் சேதம்!
கிளிநொச்சில் நேற்றைய தினம் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததன் காரணமாக மக்களின் குடியிருப்புகள் சேதமடைந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கின்றது.
இதன்படி, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர், கிருஷ்ணாபுரம் ஆகிய பிரதேசங்களின் குடியிருப்புகளே சேதமடைந்து உள்ளன.
மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு கொடுத்த தகவல்களின்படி மாலை 5 மணியளவில் செல்வா நகரில் மூன்று வீடுகளும், கிருஷ்ணாபுரத்தில் 5 வீடுகளும் பாதிப்படைந்துள்ளதாக தெரிய வருகிறது.
இதேவேளை, மரம் முறிந்து விழுந்த காரணத்தால் வீடு சேதமடைந்துள்ளதுடன், முச்சக்கரவண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளது. பிற்பகல் 3 மணியளவில் வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்களின் விரிவான தவல்கள் இன்னும் கிடைக்க பெறாமையால் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு அது தொடர்பான தகவல்களை திரட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









