யாழில் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவது எப்படி? காவல்துறையினருக்கு ஆலோசனை
யாழ். மாவட்டத்திலுள்ள மக்களுடன் நெருக்கமாக பழகுவதன் ஊடாகவே அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்களை காவல்துறையினர் கட்டுப்படுத்த முடியும் என காவல்துறை மா அதிபரிடம் தான் வலியுறுத்தியாக யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்(Justin Gnanapragasam) தெரிவித்துள்ளார்.
யாழிற்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த காவல்துறை மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவுடனான கலந்துரையாடலின் பின்னர் யாழ் ஆயர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட் அவர், “ வடக்கில் வேலையில்லாப் பிரச்சினை காரணமாகவே வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாக காவல்துறை மா அதிபர் என்னிடம் தெரிவித்தார்.
தற்போதைய காவல்துறை மா அதிபர் எஸ்.எஸ்.பியாக, டி.ஐ.ஜியாக யாழ். மாவட்டத்தில் கடமையாற்றி இருந்த ஒருவர். அவருக்கு யாழ்ப்பாணம் நன்றாக தெரியும். யாழ்ப்பாண மாவட்டத்தின் மீது நல்ல விருப்பம் கொண்டவர். இன்றைய தினம் இங்கே உள்ள பிரச்சினை தொடர்பில் ஆராய யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்து வந்து என்னையும் சந்தித்துள்ளார்.
இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பில்லாத விரக்தி நிலை காரணமாகவே போதைப் பொருள் பாவனை அதிகரித்து காணப்படுகிறது.
அதேபோல பொலிசார் பொதுமக்களுடன் கூடுதலாக பழகவேண்டும். மக்களுக்கு சேவை செய்யத்தான் பொலிசார். இராணுவத்தால் அது முடியாது. எனவே மக்களுடன் உறவினைப் பேண வேண்டும்” என்றார்.