அரசாங்கத்திற்கு பெரும் சவாலான ஜெனிவா விவகாரம்
ஜெனிவா விவகாரம் அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக காணப்பட்டது. சர்வதேசத்தில் மண்டியிடாமல் இராணுவத்தினரை அரசாங்கம் பாதுகாத்துள்ளது.
ஜெனிவா விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி குறுகிய காலத்தில் அரசாங்கம் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் ஏற்பட்ட சவால்களை அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றி கொண்டுள்ளது.நல்லாட்சி அரசாங்கத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் அரச ஆதரவுடன் எழுச்சிபெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிபோனதை அரசாங்கத்தின் சூழ்ச்சி என எதிர்தரப்பினர் குறிப்பிட்டுக் கொண்டு நாடாளுமன்றில் முறையற்ற வகையில் செயற்பட்டார்கள்.
வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டதும் எதிர்க்கட்சியினர் அமைதியடைந்து விட்டார்கள்.
அரசாங்கத்தை அவமதித்த குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறை செல்லவில்லை. நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காகவே அவர் சிறை சென்றுள்ளார் என்பதை எதிர் தரப்பினர் விளங்கிக் கொள்ள வேண்டும். ரஞ்சன் ராமநாயக்கவின் விவகாரத்துக்கு அரசியல் ரீதியில் இனியொருபோதும் தீர்வு காண முடியாது.
நாட்டின் ஒற்றையாட்சி முறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது. பலவீனப்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒற்றையாட்சி முறைமையின்அம்சங்களை பாதுகாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றார்.