இந்திய இழுவைப் படகுகளால் யாழ்ப்பாண கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு
இந்திய இழுவைப் படகுகளால் யாழ்ப்பாணம் - மயிலிட்டி கடற்றொழிலாளர்களின் ஒரு கோடி ரூபா பெறுமதியான தொழில் முதல்கள் நாசம் செய்யப்பட்டுள்ளதாக மயிலிட்டி கடற்றொழில் சங்கத்தின் தலைவர் குணரத்தினம் குணராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்றிரவு 10.00 மணியளவில் நூற்றிற்கும் மேற்பட்ட இந்திய இழுவைப் படகுகள் எமது மயிலிட்டி கடற்கரையில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர்களுக்குள் உள்நுழைந்து அட்டகாசம் செய்துள்ளன.
ஒரு கோடிக்கும் மேற்பட்ட வலைகள் நாசம்
இதனால் 20 கடற்றொழிலாளர்களின், சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வலைகள் உள்ளிட்ட தொழில் முதல்கள் நாசம் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கு இன்று காலை தெரியப்படுத்தினோம். அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்திய கடற்றொழிலாளர்களின் இந்த அட்டகாசத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு எத்தனை ஆண்டுகள் தேவை? வாய் பேச்சிற்கு மட்டும் நடவடிக்கை எடுப்பதாக கூறினால் போதுமா?
தொழில் முதல்களை இழந்த கடற்றொழிலாளர்கள்
தொழில் முதல்களை இழந்த கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து தொழிலில் ஈடுபடுவதற்கு வழி தெரியாமல் தவிக்கின்றனர். இந்த விடயம் அரசாங்கத்துக்கு தெரியுமா? நாங்கள் பல்வேறு பிரச்சினைகளின் மத்தியிலே கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றோம். இந்நிலையில் எமது தொழில் முதல்களை இவ்வாறு தொடர்ச்சியாக அழித்து வந்தால் நாங்கள் என்ன செய்வது?

சட்டவிரோதமாக அத்துமீறி நுழைபவர்களை கட்டுப்படுத்துவதற்கு ஏன் ஒரு தீர்க்கமான நடவடிக்கையை அரசினால் எடுக்க முடியவில்லை? தயவுசெய்து இனியாவது எமது கடற்றொழிலாளர்களின் நிலையை அறிந்து விரைவாக ஒரு நிரந்தர நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |