அச்சமூட்டும் செம்மணி புதைகுழி..! அதிர வைக்கும் காட்சிகள் - மூடி மறைக்க முயலும் அரசு
செம்மணி மனிதப் புதைகுழியினை மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் கட்டளையை பிறப்பித்ததோடு அது தொடர்பில் பாதீட்டினை நீதியமைச்சிற்கு அனுப்பி வைப்பதற்கு சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதிவான் உத்தரவிட்டார்.
இன்றைய தினம் PR 433 PC 2025 என்ற செம்மணி - சிந்துபாத் மனித புதைகுழி விவகாரம் யாழ். நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைகளுக்காக எடுத்து கொள்ளப்பட்டது.
ஆரம்ப கட்ட அகழ்வின் போது 6 மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டமையால், மேலும் என்புத்தொகுதிகள் இருக்க கூடும் என சந்தேகிக்கபட்டமையால் குறித்த புதைகுழியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்துமாறு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
மனித என்பு எச்சங்கள்
இந்நிலையில், இந்த வழக்கில் கடமையாற்றும் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தொல்பொருள் தடயவியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா ஆகியோரின் அபிப்பிராய அறிக்கை நிபுணத்துவ அறிக்கையின் பிரகாரம் மூன்று விதமான விடயங்கள் இருவராலும் முன் வைக்கப்பட்டது.
முதலாவது விடயமாக குறிக்கப்பட்ட அகழ்வு இடம்பெறும் இடத்தில் 1.6 மீற்றர் அடி அளவிலேயே மனித என்பு எச்சங்கள் அடையாளப்படுத்த கூடியதாக உள்ளது.
குழப்பமான சூழலில் மனித என்புக்கூடுகள் புதைக்கப்பட்டுள்ளது. ஆடைகளோ அல்லது தனிப்பட்ட அணிகலன்களோ குறித்த இடங்களில் காணப்படவில்லை.
சட்டவிரோதமான இரகசியமான புதைகுழி
இது சட்டவிரோதமான இரகசியமான புதைகுழியாக இருக்கலாம் எனவும் தற்பொழுது அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளில் 17 எலும்புக்கூடுகள் பகுதியளவிலும் முழுமையாகவும் அடையாளம் காணப்பட்டு 5 மனித எலும்பு கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் பல மனித எச்சங்கள் அடையாளப்படுத்தபட்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக இந்த மனித புதைகுழியை அகழ வேண்டும் என்ற பரிந்துரை பேராசிரியர் மற்றும் சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டது.
பாதிக்கபட்டவர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டதரணியும் இது தொடர்பில் அகழ்வை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில் அவர்கள் அகழ்வு குறித்து திருப்திபடும் வரையில் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அது தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனின் கோரிக்கையின் அடிப்படையில் சமர்பித்து நீதி அமைச்சின் நிதியினை பெறுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டது.
மேலும் தொல்லியல் தடயவியல் பேராசிரியர் ராஜ் சோம தேவாவின் அபிப்பிராய அறிக்கை மற்றும் அகழ்வில் திருப்தியடைவதாக தெரிவித்த நீதிவான் அவரே தொடர்சியான பணிகளை முன்னெடுக்க அனுமதிகளை வழங்கினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
