சம்பூரில் கண்ணிவெடி அகழ்வின் போது மீட்கப்பட்ட மனித எச்சங்கள் : நீதிபதி பிறப்பித்த உத்தரவு
திருகோணமலை - சம்பூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக எதிர்வரும் 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கும், தொல்பொருளியல் திணைக்களத்திற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பகுதிக்கு இன்று (23) விஜயம் மேற்கொண்டு கள ஆய்வை மேற்கொண்டிருந்த மூதூர் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் குறித்த இடத்தை பார்வையிட்டிருந்ததுடன் அங்கு வருகை தந்திருந்த திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியனார்.
அத்துடன் சட்ட வைத்திய அதிகாரிக்கு குறித்த இடத்தில் அகழ்வுப்பணியை முன்னெடுப்பது தொடர்பாக மிதிவெடி அகற்றும் நிறுவனத்துடன் கலந்துரையாடி அறிக்கை சமர்ப்பிக்குமாறும், தொல்லியல் திணைக்களத்திடம் குறித்த இடத்தில் மயானம் இருந்ததா என்பது தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பான அறிக்கைகளை இரு தரப்பினரும் எதிர்வரும் புதன்கிழமை (30) நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவ இடத்தை பார்வையிட்டனர்
குறித்த இடத்திற்கு அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம், காணாமல் போனோர் அலுவலகம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் இன்றைய தினம் (23) வருகை தந்து சம்பவ இடத்தை பார்வையிட்டிருந்தனர்.
சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றுவதற்கான அகழ்வுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) குறித்த பகுதியில் இருந்து சிதைந்த மனித மண்டை ஓடு மற்றும் என்புப்பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன.
இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மூதூர் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எம்.நஸ்லீம் குறித்த இடத்தை பார்வையிட்டதோடு குறித்த பணியை 23ஆம் திகதிவரை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறும் குறித்த பகுதியை நீதிமன்றின் முன்னிலையில் அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் காணாமல் போனோர் அலுவலகம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின் பிரசன்னத்துடன் புதன்கிழமை (23) அகழ்வதற்கும் உத்தரவிட்டிருந்தார்.
காவல்துறை பாதுகாப்பு
அத்துடன் காவல்துறையினரை குறித்த பகுதியில் பாதுகாப்புக் கடமைகளுக்காக ஈடுபடுத்துமாறும் காவல்துறையினருக்கு நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்.
அந்தவகையில் குறித்த பகுதிக்கு இன்றைய தினம் (23) குறித்த திணைக்களங்களின் அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்தனர்.
அத்துடன் குறித்த பகுதியானது தொடர்ந்தும் காவல்துறையினரின் பாதுகாப்பின்கீழ் இருந்து வருவதுடன் அப்பகுதிக்குள் எவரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
எதிர்வரும் 30ஆம் திகதி கிடைக்கப்பெறுகின்ற இரு தரப்பினரதும் அறிக்கைகளை ஆராய்ந்தபின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



