சிறிலங்கா காவல்துறையினருக்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்கு! உயர்நீதிமன்றத்திற்கு செல்லவும் முஸ்தீபு
ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தை பலவந்தமாக தடுக்கும் வகையில் காட்டுச் சட்டத்தை கையில் எடுத்த சிறிலங்கா காவல்துறையினருக்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண (Buddhika Pathirana) தெரிவித்துள்ளார்.
கொழும்பு - மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் காரணமாக ராஜபக்ச அரசாங்கம் அச்சமடைந்துள்ளது.
நாட்டின் தலைவர், காவல்துறை மா அதிபர் தொடக்கம், கீழ்நிலை அதிகாரிகள் ஆகியோரை வீதிக்கு இறக்கி, எமது போராட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தார். ஆனாலும் எமது போராட்டம் கொழும்பில் மாத்திரமல்ல நாடு பூராகவும் நடத்தப்பட்டது. அதற்கு காரணம் இந்த அரசாங்கம் தான்.
அரசியல்வாதிகள், காவல்துறையினரை தமது தேவைக்காகப் பயன்படுத்துகிறார்கள்.
அதிலும் குறிப்பாக சில காவல்த்துறை உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம் இருந்து வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன், எமது போராட்டத்தில் காட்டுச் சட்டத்தைப் பிரயோகித்து எமது போராட்டங்களை வலுக்கட்டாயமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இவர்கள் தொடர்பில் எமது சட்டக்குழு விரைவில் மனித உரிமை மீறல் வழக்கினை உயர்நீதிமன்றத்தில் தொடரவுள்ளது.
இதேவேளை மாவட்ட காவல்த்துறைக்குப் பொறுப்பாக இருப்பவர்கள், கொழும்பிற்கு அவர்களின் மாவட்டங்களிலிருந்து போராட்டம் செய்யும் மக்கள் நோக்கில் பயணி்க்கும் பேருந்துக்களை தடுக்க வேண்டும் எனவும் இல்லை என்றால் அவர்களது பதவி பறிக்கப்படும் எனவும் அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நிலைக்கு இன்று நாடு தள்ளப்பட்டுள்ளமை கவலை அளிக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் பாரிய போராட்டம் ஒன்று கொழும்பில் நடத்தப்பட்ட நிலையில் அதனைத் தடுக்கும் செயற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டிருந்தனர்.