இறப்பிலும் இணைபிரியாத தம்பதி -மக்களை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்
திருச்சி அருகே மனைவி இறந்த கொஞ்ச நேரத்திலேயே அவரது கணவரும் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருச்சி பாலக்கரை ரெட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கு வயது 90. இவருடைய மனைவி சம்பூரணத்தம்மாள் (வயது 86). இந்த தம்பதிக்கு 3 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமான நிலையில், தனித்தனியாக வசித்து வருகின்றனர். கணவன் மனைவி இருவரும் வெவ்வேறு ஊர்களில் இருக்கும் தமது மகன்களுடன் வசித்து வருகின்றனர்.
மனைவி மரணம்

இந்நிலையில், வயது முதிர்வின் காரணமாக சம்பூரணத்தம்மாள் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணிக்கு மரணமடைந்திருக்கிறார். இதனால் வீட்டினர் துக்கத்தில் ஆழ்ந்தனர். இதனையடுத்து, இந்த தகவல் உயிரிழந்த சம்பூரணத்தம்மாளின் கணவர் கிருஷ்ணன் மற்றும் பிற உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து கிருஷ்ணன் வசித்து வரும் மகனின் வீட்டில் சம்பூரணத்தம்மாளின் உடலை வைக்க குடும்பத்தினர் முடிவெடுத்திருக்கின்றனர். தொடர்ந்து, அதற்கான பணிகள் நடைபெற்று வந்திருக்கின்றன.
சிறிது நேரத்தில் கணவனும் மரணம்

சம்பூரணத்தம்மாளின் உடலை அம்புலன்சில் ஏற்றும்போது பூமிநாத நகரில் இருந்த கிருஷ்ணனும் காலை 6.30 மணியளவில் மரணமடைந்திருக்கிறார். இதனால் அவரது மகன் மற்றும் மகள்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
மனைவி இறந்த ஒரு மணி நேரத்தில் கணவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.