பிரபாகரனின் சடலம் எங்கே என்று எனக்கு தெரியும் : சரத் பொன்சேகா பகிரங்கம்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலம் எங்கே என்றும், சடலத்துக்கு என்ன நடந்தது என்பதும் எனக்கு தெரியும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அது பற்றி பகிரங்கமாக கூறமுடியாது என குறிப்பிட்ட அவர் அவ்வாறு கூறினால் அந்த இடத்துக்கு சென்று சிலர் நினைவேந்தல் நடத்தக்கூடும் எனவும் நினைவகம் அமைக்க முற்படக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் வலையொளித் தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே சரத் பொன்சேகா இந்த விடயங்களைக் தெரிவித்தார்.
சடலங்களை அடையாளம் கண்ட கருணா
குறித்த நேர்காணலின் போது “போர் தொடர்பில் நீங்கள் இன்றளவிலும் மனதுக்குள் இரகசியமொன்றை மறைத்து வைத்துள்ளீர்கள். எனக்குகூட அதை பற்றி குறிப்பிடமாட்டீர்கள். சிலவேளை உங்களது மனைவிக்குகூட அது தெரியாமல் இருக்கலாம். வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலத்துக்கு என்ன நடந்தது.” என ஊடகவியலாளரினால் பொன்சேகாவிடம் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த பொன்சேகா, “பிரபாகரன் போரில் கொல்லப்பட்டுவிட்டார். இது இரகசியம் அல்ல. பிரபாகரன் கொல்லப்பட்டதும் கருணாவை விமானத்தில் சம்பவ இடத்துக்கு அனுப்பினோம். சூசை, பொட்டு அம்மானின் மனைவி உட்பட அனைவரது சடலங்களையும் அவர் அடையாளம் கண்டார்.
பொட்டு அம்மானின் மனைவியின் கழுத்தில் மூன்று சயனைட்டுகள் இருந்தன. பொட்டு அம்மானுக்கு துப்பாக்கிச்சூடு பட்டதும், அவர் குண்டை வெடிக்கச் செய்து இறந்துவிட்டார் என கே.பி கூட குறிப்பிட்டிருந்தார்.
நினைவேந்தல் நடத்த முற்படக்கூடும்
பிரபாகரனின் சடலம் அடையாளம் காணப்பட்டது. பாரிய காயங்கள் இருந்தன. இது பற்றி எனக்கு தெரியப்படுத்தப்பட்டது. விடுதலைப் புலிகளின் சீருடையில் இருந்தார். சீருடையை அகற்றுமாறு நான் கூறினேன். சரணடைந்தவர்களுக்கும் சீருடையில் இருப்பதற்கு நாம் அனுமதிக்கவில்லை.

பிரபாகரனின் சடலத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி நான் ஆலோசனை வழங்கினேன். அது என்னவென்பதை நான் சொல்ல மாட்டேன். ஏனெனில் அவ்வாறு சொன்னால் அந்த இடத்துக்கு சென்று சிலர் நினைவேந்தலை நடத்துவதற்கு முற்படக்கூடும்.
அதே பகுதியில் குறிப்பிட்டதொரு இடத்தில் சடலத்துக்கு இறுதியாக செய்யவேண்டியவற்றைச் செய்தோம். இடத்தை ஏன் சொல்ல முடியாது என்றால், சிலர் அங்கு சென்று நினைவகம்கூட அமைக்க முற்படலாம். பிரபாகரனை உயிருடன் பிடிக்கும் திட்டம் எனக்கு இருக்கவில்லை“ எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை குறித்த நேர்காணலின்போது இறுதிப் போரில் நடந்த மேலும் சில தகவல்களையும் சரத் பொன்சேகா வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |