தாயகத்தின் மண்வாசனையை உலகுக்கு எடுத்துச் சென்ற IBC தமிழின் அம்மான் காலமானார்
IBC தமிழின் ‘Tea கடை’ நிகழ்ச்சியின் மறக்க முடியாத கலைஞருக்கு தமிழர் மத்தியில் அஞ்சலி...
தாயகத்தின் குச்சுக்கிராமங்களுக்குள் சென்று அங்குள்ள மக்களின் வாழ்வியலையும், கிராமிய மொழிநடையையும், மண்ணின் மண்வாசனையையும் உலகத் தமிழர்களிடம் கொண்டு சேர்த்த IBC தமிழின் ‘Tea கடை’ நிகழ்ச்சியின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான ‘அம்மான்’ பொன். ஈஸ்வரன் காலமானார்.
‘அம்மான்’ என்பது அவருக்கு வழங்கப்பட்ட ஒரு சாதாரண அழைப்புப் பெயர் அல்ல. தாயகத்தின் கிராமிய சமூகத்தில், பெரும் விவசாயிகளாகவும், வயது முதிர்ந்த பின்னரும் சமூகத்தில் ஆளுமையுடன் மதிப்புடன் திகழ்ந்தவர்களையும் அன்புடனும் மரியாதையுடனும் அழைத்த பாரம்பரியப் பெயராக ‘அம்மான்’ விளங்கியது.
தனித்த அடையாளம்
அந்தப் பெயருக்கே ஐரோப்பியத் தமிழர் மத்தியில் தனித்த அடையாளத்தை ஏற்படுத்தியவர் பொன். ஈஸ்வரன். கலையோடு பிறந்த அற்புதமான கலைஞராகத் திகழ்ந்த அம்மான், தனது இளமைக்காலங்களில் பெண்வேடம் ஏற்று மேடைகளில் சிறப்பாக நடித்ததுடன், வில்லிசை, குறும்படங்கள், மேடை நாடகங்கள் என பல்வேறு கலைத் தளங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

தாயகத்தின் மீதும், தாயக மக்களின் மீதும், தலைவன் மீதும் ஆழ்ந்த பற்றும் பக்தியும் கொண்டிருந்த அவர், தனது கலைப் படைப்புகளிலும் பேச்சிலும் அந்த உணர்வுகளை வெளிப்படுத்தி வந்தார்.
குறிப்பாக IBC தமிழின் ‘Tea கடை’ நிகழ்ச்சியில் அவரது இயல்பான நடைமுறைப் பேச்சும், கிராமிய நகைச்சுவையும், தாயகத்து மக்களின் வாழ்வியலை பிரதிபலித்த உரையாடல்களும் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
அவரது பேச்சு நடையை ரசித்த இளைய தலைமுறையினர், வீட்டில் தமது பெற்றோருடன்கூட அம்மானின் பாணியில் பேசும் அளவுக்கு அவரது பாத்திரமும் பேச்சுவழக்கும் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. காலப்போக்கில் மறைந்து வரும் பழம்பெரும் கிராமியச் சொற்களைத் தேடிப்பிடித்து, அவற்றை தனது நிகழ்ச்சிகளில் இயல்பாகப் பயன்படுத்தியதில் அம்மான் பொன். ஈஸ்வரன் தனித்துவமானவர்.
‘அம்மான்’ பொன். ஈஸ்வரன்
தாயகத்தின் குச்சுக்கிராமங்களின் பேச்சுமொழி, மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் மண்ணின் மண்வாசனையை உலகத் தமிழர்களிடம் கொண்டு சென்ற அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
வில்லிசை முதல் மேடை நாடகங்கள் வரை நீண்ட அவரது கலைப்பயணம், இறுதியில் IBC தமிழின் ‘Tea கடை’ நிகழ்ச்சியின் ஊடாக புதிய தலைமுறையினரிடமும் சென்றடைந்தது.
IBC தமிழை இறுதிவரை ஆத்மார்த்தமாக நேசித்த அம்மான் பொன். ஈஸ்வரனின் மறைவு, தாயகக் கலைத்துறைக்கும், கிராமியக் கலை மரபுக்கும், அவரை நேசித்த தமிழர்களுக்கும் பேரிழப்பாக அமைந்துள்ளது.
தனது பேச்சால் சிரிக்க வைத்தும், தனது கலை மூலம் தாயகத்தை நினைவூட்டியும், மறைந்து வரும் கிராமியச் சொற்களையும் வாழ்வியலையும் தனது குரலால் பதிவு செய்தும் சென்ற ‘அம்மான்’ பொன். ஈஸ்வரன், இனி நினைவுகளில் மட்டுமே வாழும் ஒரு அழியாத கலைக் குரலாக இருப்பார்.
அவரது மறைவுக்கு IBC தமிழ் குடும்பமும், உலகத் தமிழர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
