தெற்கு லெபனானில் உள்ள டயர் நகர் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்
புதிய இணைப்பு
இஸ்ரேலிய இராணுவம் தெற்கு லெபனானில் உள்ள டயர் நகரின் மீது பாரிய தாக்குதலை நடத்தியுள்ளது.
அப்பகுதி மக்களுக்குக் கட்டாய வெளியேற்ற அறிவிப்புகளை வழங்கிய பின்னர் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சற்று நேரத்திற்கு முன்பு, இஸ்ரேலிய இராணுவம் பெய்ரூட்டின் ஹரெட் ஹ்ரெய்க், கோபெய்ரி லைலாகி, ஹதாத், புர்ஜ் அல்-பராஜினே, தவ்ஹிதத் அல்-கதிர் மற்றும் ஷியா ஆகிய சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு கட்டாய இடப்பெயர்வு உத்தரவுகளையும் இஸ்ரேல் பிறப்பித்தது.
இந்நிலையில் இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் லெபனான் மீதான விரிவடைந்து வரும் படையெடுப்பு காரணமாக, நாடு முழுவதும் குறைந்தது 12 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
லெபனானின் கடலோர நகரமான டயரில் (Tyre) வசிக்கும் மக்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் அவசர வெளியேற்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இது குறித்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் (IDF) அரபு மொழி செய்தித் தொடர்பாளர் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
குறித்த அறிவிப்பில், “உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடியாக உங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஜஹ்ரானி (Zahrani) ஆற்றின் வடக்குப் பகுதிக்குச் செல்லுங்கள்" என அறிவுறுத்தியுள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பு
அந்தப் பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் நிலைகளைக் குறிவைத்துத் தீவிரமான தாக்குதல்கள் நடத்தப்பட உள்ளதாலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக IDF தெரிவித்துள்ளது.
குறிப்பாக, கடந்த ஏப்ரல் நான்கு அன்று இதேபோன்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து டயர் நகரின் பல பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருந்தது.

இதில் மருத்துவமனை ஒன்று சேதமடைந்ததுடன் பல குடியிருப்பு கட்டடங்களும் தரைமட்டமாக்கப்பட்டன.
தற்போது விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை, எஞ்சியிருக்கும் சுமார் 20,000 குடிமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பின் இராணுவச் செயல்பாடுகளை முடக்கும் நோக்கில் இஸ்ரேல் தனது தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |