புதுப்பிக்கப்பட்ட கொழும்பு மத்திய பேருந்து நிலையம் இன்று திறப்பு!
நவீனமயப்படுத்தப்பட்ட கொழும்பு - புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் இன்று புதன்கிழமை (08) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.
இப்புனரமைப்புப் பணிகள் சுமார் 585 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பயணிகளின் வசதிக்காகப் பேருந்துகள் புறப்படும் நேரம் மற்றும் சென்றடையும் நேரம் ஆகிய தகவல்கள் அகன்ற டிஜிட்டல் திரைகளில் காட்சிப்படுத்தப்படும்.
பேருந்து சேவைகள்
பேருந்து சேவைகள் மட்டுமன்றி புறக்கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து புறப்படும் தொடருந்துகள் மற்றும் விமான சேவைகள் குறித்த விரிவான தகவல்களையும் பயணிகள் இங்கிருந்தே அறிந்துகொள்ள முடியும்.
சித்திரைப் புத்தாண்டுக்காகத் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு எவ்வித அசௌகரியங்களும் ஏற்படாத வகையில் அனைத்து வசதிகளும் இங்கு மேம்படுத்தப்பட்டுள்ளன.

தினசரி சுமார் 1500 பேருந்து சேவைகள் இந்த நிலையத்திலிருந்து முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அவற்றைப் பராமரிக்க இலங்கை போக்குவரத்துச் சபையின் பயிற்சி பெற்ற அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கிளீன் சிறிலங்கா (Clean Sri Lanka) செயலகத்தின் நேரடி மேற்பார்வையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ள இந்த நிலையம், பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








