ஈரானின் ‘எவின்’ சிறைச்சாலை மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் : பல கைதிகள் தப்பியோட்டம்
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ‘எவின்’ சிறைச்சாலை மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுகளை வீசி கடும் தாக்குதல் நடத்தியுள்ளன. இதனால் அந்த சிறையிலிருந்த பல கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, ரிசோன் லெசியொன், பீர்சேபா, சாபத், ஆஸ்கெலான், ஆஸ்டோட், பெய்சன் உட்பட பல்வேறு நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசி வருகிறது. தெற்கு இஸ்ரேலில் உள்ள மின் நிலையம் மீது ஈரான் ராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் மின் நிலையம் முழுமையாக சேதமடைந்து, அந்த பகுதியில் உள்ள பல்வேறு நகரங்கள் இருளில் மூழ்கி உள்ளன.
ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடி
ஈரானின் இன்றைய இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக, இஸ்ரேல் விமானப்படை கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரான், மஸ்சாத், அமாதான், தசுபூல், ஷாகித் பக்தியாரி, தப்ரீசு ஆகிய பகுதிகளில் உள்ள 6 ஈரான் விமானப்படை தளங்கள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசின. இதில் 6 விமானப்படை தளங்களும் அழிக்கப்பட்டன. அங்கு நிறுத்தப்பட்டிருந்த எப்14, எப்5, ஏஎச்1 ரகங்களை சேர்ந்த 15 போர் விமானங்கள் மற்றும் உலங்கு வானூர்திகள் தீயில் எரிந்து நாசமாகின என்று தகவல்கள் வெளியாகின.
அதேபோல், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ‘எவின்’ சிறைச்சாலையை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிந்தன. இதில், அந்தச் சிறைச்சாலை கடும் சேதம் அடைந்துள்ளதாகவும், 15,000 இற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அந்த சிறையில் இருந்து கைதிகள் பலர் தப்பிச் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்களில் ஈரானில் இதுவரை 950 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 3,450 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
