கடற்படை முகாமை சுற்றிவளைத்து முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்...!
முல்லைத்தீவு கடலில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்தக் கோரி வட்டுவாகல் கடற்படை முகாமை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு கடலில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சுருக்குவலை மற்றும் ஒளிபாச்சி மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், வட்டுவாகல் பாலத்தில் இருந்து கோட்டாபய கடற்படை முகாம் வரை சென்ற மீனவர்கள் அங்கு கடற்படை முகாமை முற்றுகையிட்டு தங்கள் கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த கடற்தொழில் அமைப்புக்கள் இந்த கவனயீர்ப்பு போராட்ட நடவடிக்கையினை ஏற்பாடு செய்திருந்தன.
முல்லைத்தீவு கடலினை நம்பி 5ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், சாலை தொக்கம் கொக்கிளாய் வரையான கடற்பரப்பில் சுருக்குவலை, ஒளிபாச்சி மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
இதனால் மீனவர்களின் வலைகள் அறுக்கப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் சிறுமீன் இனங்கள் அழிக்கப்படுகின்றன.
கோரிக்கை - மனு

மீனவர்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை இலங்கை கடற்படையினர் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், கடற்தொழில் அமைச்சர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்ப்டட தீர்மானத்திற்கு அமைய காவல் அரண்களை அமைத்து கட்டுப்படுத்தி தருமாறும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இந்த நிலையில், கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளை தளபதிக்கும், கோட்டபாய கடற்படை முகாம் தளபதிற்கும் மீனவர்கள் மனு கையளித்துள்ளனர்.
கடற்தொழில் அமைச்சருக்கும் குறித்த விடையத்தினை தெரியப்படுத்தியதுடன், இன்று இரவிற்குள் முடிவு சொல்லப்படும் என அறிவித்ததையடுத்து மீனவர்கள் கலைந்து சென்றுள்ளார்கள்.