கறுப்பு சந்தையில் எரிபொருள் விற்பனை செய்பவர்களை கைது செய்ய காவல்துறை அதிரடி நடவடிக்கை..!
அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்பவர்களை கைது செய்யும் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு பணப்பரிசு வழங்க சிறிலங்கா காவல்துறை தீர்மானித்துள்ளது.
காவல் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் எரிபொருளின் தேவையைப் பயன்படுத்தி சிலர் சட்டவிரோத எரிபொருளை சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்வதால் நுகர்வோர் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்தநிலையில் இதனை தடுக்கும் வகையிலேயே அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை கைது செய்யும் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு பணப்பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக காவல் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
பணப்பரிசு விபரம்
இதன்படி, 100 லீற்றர் வரையான பெட்ரோல் அல்லது டீசலை கைப்பற்றும் அதிகாரிகளுக்கு 50 ஆயிரம் ரூபாவும், 100 முதல் 500 லீற்றர் வரையிலான எரிபொருளை கைப்பற்றும் அதிகாரிகளுக்கு 02 இலட்சம் ரூபாவும் பரிசாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, 500 முதல் 1000 லீற்றர் வரையான எரிபொருளைக் கைப்பற்றுவோருக்கு 03 இலட்சம் ரூபாயும் வழங்கப்படவுள்ளது.