ஐ.எம்.எப் உடன் இறுதி உடன்பாட்டை இன்னும் எட்டவில்லை..! அரசாங்கம் தகவல்
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்ட ஊழியர்மட்ட ஒப்பந்தம் ஏன் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வியெழுப்பினார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் ஊழியர்மட்டத்தில் செய்துகொண்ட ஒப்பந்தம் ஏன் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை என்பதை நாடு தெரிந்து கொள்ளவேண்டாமா என அவர் கேள்வி எழுப்பியிருந்த்தார்.
வரைவு ஒப்பந்தம் மட்டுமே எட்டப்பட்டுள்ளது
விமல் வீரவன்சவின் குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர் டினேஷ் குணவர்தன,
"சர்வதேச நாணய நிதியத்துடன் வரைவு ஒப்பந்தம் மட்டுமே எட்டப்பட்டுள்ளதாகவும் இன்னும் இறுதி உடன்பாட்டை எட்டவில்லை எனத்", தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இலங்கையுடன் உடன்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர்கள் சிலரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவந்ததாக விமல் வீரவன்ச தெரிவித்தார்.
ஆனால் இறுதி ஊழியர் ஒப்பந்தம் இதுவரையில் எட்டப்படவில்லை என பிரதமர் கூறினால், அதை தாங்கள் ஏற்றுக்கொள்ளவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.