இலங்கை தொடர்பில் நம்பிக்கை வெளியிட்ட ஐம்.எப்.எவ்
பாரிய கடன் வழங்குநர்கள்
இலங்கை தொடர்பில் நம்பிக்கையுடன் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் மசூத் அஹமட் உடனான கலந்துரையாடலின் போது, இலங்கையின் விடயம் குறித்து எடுத்துரைத்த சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு ஜப்பான், இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகள் பாரிய கடன் வழங்குநர்களாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கூறியுள்ளார்.
தனியார் துறையின் பங்களிப்பு
பொதுமக்கள் தரப்பும் விரைவில் இணக்கம் தெரிவிப்பார்கள் என நம்புகிறோம் எனவும் அதன் பின்னர், அனைத்து அளவுருக்களையும் பார்த்து, தனியார் துறையின் பங்களிப்பையும் கொண்டுவருவதாகவும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை அடுத்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிதி உதவியை அடுத்த 48 மாத கால ஏற்பாடுகளின் கீழ் இலங்கைக்கு வழங்க ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.
பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுத்தல், நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்தல், பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாத்தல், ஊழல் பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கான கட்டமைப்பு சீர்திருத்தங்களை முடுக்கிவிடுதல் மற்றும் இலங்கையின் வளர்ச்சி திறனுக்கான தடையை அகற்றுதலை நோக்காக கொண்டு இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.