ரிசாட்டின் கைதுக்கு எதிராக பேச முடியுமா? கடும் தொனியில் சாடிய இம்ரான் மஹ்ரூப்
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட்டின் கைதுக்கு எதிராகப் பேச அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தைரியம் உள்ளதா? என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
நல்லாட்சி அரசாங்கத்தை குறைகூறி பாரிய பொய்களுக்கு மத்தியில் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது . ஆட்சிக்கு வர அவர்கள் கூறிய அனைத்தும் பொய் என மக்கள் உணர ஆரம்பித்துள்ளதால் அதை தடுக்க தமது சர்வாதிகாரத்தை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
மக்களின் எதிர்க்கட்சியாக சீனி ஊழல், தேங்காய் எண்ணெய் மோசடி, காடழிப்பு, துறைமுக நகரம், ஈஸ்டர் தாக்குதல் உள்ளிட்ட விடயங்களை மக்கள் முன் நாம் வெளிக்கொண்டு வந்தோம்.
அதில் முக்கியமான பாத்திரமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ செயற்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அரசு இன்று அவரைக் கைதுசெய்ய முயற்சிக்கிறது. இதன் உண்மைத் தன்மை வெளியில் தெரிந்ததும் வழமைபோல் இனவாதத்தை தூண்டி தமது இயலாமையை மறைக்க ரிசாட்டைக் கைது செய்துள்ளனர்.
இந்தக் கைதுகளுக்கு அஞ்சி எதிர்க்கட்சி வாயை மூடி இருக்காது - இன்று ரிசாட் சார்பாக பேச அவர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருமில்லை. ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களே ரிசாட்டுடன் உள்ளனர்.
அனைவரும் இருபதுக்கு கை உயர்த்தியதால் அவர்களின் வாய்களுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. இவர்களின் கட்சித் தலைவர் கைது செய்யப்பட்ட போது வாய் திறக்காத இவர்களின் வாய் அரசாங்கத்துக்கு வால் பிடிக்க மட்டும் திறக்கப்படுகிறது.
கடந்த வாரம் ரிசாட்டின் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் மிகவும் சத்தமாக நல்லாட்சி அரசுக்கு எதிராக பேசினார். வெட்கம் , அந்த அரசில் தான் அவரும் இருந்தார்.
அரசால் வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் பெற்றுவிட்டு இன்று இந்த அரசுக்கு வால் பிடிக்க கேவலமான அரசியல் செய்கிறார். அவரால் முடிந்தால் அதே சத்தத்துடன் அவரின் கட்சித் தலைவர் ரிசாட்டின் கைதுக்கு எதிராக பேச முடியுமா? தைரியம் உள்ளதா ?
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஈஸ்டர் தாக்குதலின் இரண்டு வருட பூர்த்தி அனுஷ்டிக்கப்பட்ட போது ஏற்பட்ட அமைதியின்மையில் அரச உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகவும் முஸ்லிம் தலைவர்களுக்கு எதிராகவும் இனவாதக் கூச்சலிட்டனர்.
அப்போது கூட இருபதுக்கு வாக்களித்த உறுப்பினர்கள் எதுவும் பேசாமல் வெளியே ஓடிவிட்டனர். அப்போது கூட நாம் தான் முஸ்லிம் தலைவர்களுடன் இருந்தோம் என்றார்.